டோமினிக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 312 ரன்கள் குவித்திருந்தது. இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், விராட் கோலி 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது.

இன்றைய நாள் ஆட்டத்தை யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக தொடங்கினார். முதல் இரு நாட்களில் நிதானம் காட்டிய ஜெய்ஸ்வால், இன்றைய நாளில் விரைந்து ரன்களை சேர்க்க முயாற்சித்தார். இதனால் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 150 ரன்களை கடந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் அசத்தினார். இதன்பின்னர் அதிரடிக்கு மாறிய அவர், வாரிக்கன் வீசிய பந்தில் சிக்சர் விளாசி அசத்தினார். இந்த நிலையில் அல்ஜாரி ஜோசப் வீசிய பந்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அறிமுகப் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 171 ரன்களில் ஏமாற்றமளித்தார். இருப்பினும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய ஜெய்ஸ்வாலுக்கு இந்திய வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். அதேபோல் அறிமுக போட்டியில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3வது இடத்தை பிடித்தார்.
முதலிடத்தில் ஷிகர் தவான் 187 ரன்களும், 2வது இடத்தில் ரோகித் சர்மா 177 ரன்களுடனும் உள்ளனர். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் பட்டியலில் 3வது இடத்தை பிடித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் அசத்தியுள்ளார். 1987ஆம் ஆண்டு இலங்கை அணியின் பிரண்டன் குருப் 548 பந்துகளை எதிர்கொண்டு முதலிடத்திலும், 1999ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி மேத்யூ சின்கெளயர் 447 பந்துகளையும் எதிர்கொண்டு இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.