இந்திய அணியின் எதிர்காலமே.. அறிமுகமான முதல் போட்டியிலேயே அசத்தல்.. மிரட்டும் ஜெய்ஸ்வால்!
டோமினிக்கா: இந்திய அணிக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும், ரோகித் சர்மா 30 ரன்களுடன் ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அல்ஜாரி ஜோசப் வீசிய பந்தில் பவுண்டரி விளாசி அரைசதத்தை கடந்தார். இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உட்பட வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர்.
அதேபோல் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணியின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்துள்ளது. கிட்டத்தட்ட 13 போட்டிகளுக்கு பின், இந்திய அணியின் தொடக்க கூட்டணியின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்துள்ளது. இதனால் இடதுகை - வலதுகை காம்பினேஷன் இந்திய அணி நல்ல பலனை கொடுக்கும் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, முதல் தர போட்டிகள், இராணி கோப்பை, விஜய் ஹசாரே, இந்திய ஏ அணி, ஐபிஎல் தொடர் என்று கடந்த இரு ஆண்டுகளாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடி வந்துள்ளார். அனைத்து தொடர்களிலும் தனது முத்திரையை பதித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்திய அணியில் அறிமுகமான முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களின் பந்துகள் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு எந்த அச்சுறுத்தலையோ, தொல்லையையோ கொடுக்கவில்லை. அவர்களை எந்தவித சிரமமுமின்றி ஜெய்ஸ்வால் எதிர்கொண்டு வருகிறார். இதனால் இந்த அரைசதத்தை சதமாக மாற்ற வேண்டும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications