சேப்பாக்கம்: இந்திய அணியின் தீவிரமான சர்ச்சையான ரசிகர்களில் ஒருவரான லண்டனைச் சேர்ந்த ஜார்வோ, சேப்பாக்கம் மைதானத்தில் சேட்டையை கொடுத்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2021ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதிய நிலையில், முதல் 4 போட்டிகள் அப்போது நடத்தப்பட்டது. கடைசி போட்டி ஓராண்டுக்கு பின் நடைபெற்றது. அந்த டெஸ்ட் தொடர் 2-2 என்ற நிலையில் இரு அணிகளும் வென்றன.

அந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்தை சேர்ந்த யூட்யூபர் டேனியஸ் ஜார்வோ, ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறிய போது, திடீரென இந்திய அணியின் ஜெர்சி, ஹெல்மெட், பேட் என்ற கச்சிதமாக கட்டிக்கொண்டு பேட்டிங் செய்ய ஆடுகளம் சென்றார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கண்டுபிடித்து மைதானத்தில் இருந்து வெளியேற்றினர்.
அதேபோல் மற்றொரு போட்டியில் உணவு இடைவேளைக்கு பின் இந்தியா பவுலிங் செய்ய களமிறங்கிய போது, இந்திய வீரர்களோடு ஒருவராக இணைந்து களம் புகுந்தார். அங்கே சென்று இந்திய வீரர்களே அடையாளம் காண முடியாத அளவிற்கு உள்ளே சென்று பவுலிங் செய்ய பந்தை கேட்க, வீரர்களே மிரண்டனர். இதனை கண்ட சிராஜ் களத்திலேயே விழுந்து விழுந்து சிரித்த வீடியோ ரசிகர்களிடையே இன்றும் பகிரப்பட்டு வருகிறது.
அதன்பின் "ஜார்வோ"வுக்கு பல்வேறு மைதானங்களும் தடை விதித்தன. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பவுலிங் செய்ய களமிறங்கியபோது திடீரென ஆடுகளத்திற்குள் இந்திய ஜெர்சியை அணிந்து புகுந்தார் ஜார்வோ. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நடுவர்கள், விராட் கோலி உள்ளிட்டோர் இணைந்து ஜார்வோவை களத்திற்கு வெளியே அனுப்பினார்கள். இதனால் சேப்பாக்கம் மைதானத்தின் பாதுகாப்பை மீறி ஜார்வோ எப்படி களத்திற்குள் புகுந்தார் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.