அகமதாபாத்: டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் நடந்த போட்டியின்போது அந்த அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், தன்னை அவதூறாகப் பேசியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யூசுப் பதான் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த இரு அணிகளுக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று நடந்தது. இதில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போதுதான் சைமண்ட்ஸ் தன்னை நோக்கி துவேஷமான முறையில் பேசியதாக கூறியுள்ளார் பதான்.இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பேட் செய்ய வந்தபோது சைமண்ட்ஸ் என்னைப் பார்த்து அவதூறாகப் பேசினார். இதனால் எனக்குள் உத்வேகம் வந்தது. டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் பந்து வீச்சை நொறுக்க ஆரம்பித்தேன்.சைமண்ட்ஸ் பேசிய பேச்சுக்களால் நான் ஆவேசமாகி பேட்டிங் மூலம் அவருக்குப் பதிலளித்தேன் என்றார் பதான்.இந்தப் போட்டியில் யூசுப் பதான் அபாரமாக ஆடி அடித்து நொறுக்கினார். 34 பந்துகளைச் சந்தித்த பதான் 74 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றி தேடித் தந்தார் என்பது நினைவிருக்கலாம்.ஸ்லெட்ஜிங் என்று கூறப்படும் இதுபோன்ற அவதூறாகப் பேசுவதில் கில்லாடி சைமண்ட்ஸ். ஏற்கனவே இந்திய வீரர்களிடம் தனது சேஷ்டையை அவர் பலமுறை காட்டியுள்ளார்.ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்லெட்ஜிங் புகார் எழுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.