சாதிப் பேச்சு சர்ச்சை.. காவல் நிலையத்தில் வழக்கு.. மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்.. பரபர திருப்பம்!
சண்டிகர் : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சக இந்திய வீரர் சாஹலை சாதிய ரீதியில் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.
Recommended Video
இந்த நிலையில், யுவராஜ் சிங் தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எனவும், தெரியாமல் யாரேனும் காயப்பட்டு இருந்தால் தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறி உள்ளார்.
யுவராஜ் சிங் மன்னிப்பு கேட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடருமா அல்லது முடித்துக் கொள்ளப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரோஹித் - யுவராஜ் சிங் பேச்சு
ரோஹித் சர்மாவுடன், யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராம் லைவ்வில் சில வாரங்கள் முன்பு பேசி இருந்தார். அப்போது இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் சாஹல் டிக்டாக் வீடியோக்கள் பதிவிட்டு வருவது பற்றி இருவரும் பேசினர்.

சாஹல் டிக்டாக்
சாஹல் டிக்டாக் மோகத்தில் வேடிக்கையாக வீடியோ பதிவிட்டு வருகிறார். அதில் சில ரசிக்கும் படி இல்லை. அவர் தன் குடும்பத்தினரையும் டிக்டாக் செய்ய வைத்து வருகிறார். இதை கோலி, கிறிஸ் கெயில் கூட கிண்டல் செய்து இருந்தனர்.

சாதிய வார்த்தை
இது பற்றி பேசுகையில், யுவராஜ் சிங் வட இந்தியாவில் தாழ்ந்த சாதியை குறிப்பிடும் ஒரு வார்த்தையை பயன்படுத்தி சாஹல் மற்றும் குல்தீப் யாதவ்வை பற்றி பேசினார். அப்போது இது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மன்னிப்பு கேட்க வேண்டும்
பின்னர் சில நாட்கள் சென்ற பின் யுவராஜ் சிங் அந்த வார்த்தையை கூறும் பகுதியை மட்டும் வீடியோவாக எடுத்து இணையத்தில் பரப்பிய சிலர், யுவராஜ் சிங் சாதிய ரீதியில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரினர். இது ட்விட்டரில் கூட ட்ரென்டிங் ஆனது.

வழக்கு
இணையத்தோடு முடிந்து விடும் என நினைத்த இந்த விவகாரம், காவல்நிலையம் வரை சென்றது. ரஜத் கல்சன் என்ற வழக்கறிஞர், ஹரியானாவின் ஹன்சி காவல்நிலையத்தில் யுவராஜ் சிங் மீது வழக்கு பதிவு செய்தார்.

ரோஹித் ஆமோதித்தார்
அந்த புகாரில் யுவராஜ் சிங் சாதிய ரீதியில் சாஹல் பற்றி பேசியதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. மேலும், அவர் ரோஹித் சர்மா, யுவராஜ் சிங் பேச்சை ஆமோதிப்பது போலவே நடந்து கொண்டார் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

யுவராஜ் சிங் வருத்தம்
இந்த நிலையில், யுவராஜ் சிங் வருத்தம் தெரிவித்து உள்ளார். தான் பேசியது தவறாக புரிந்து கொல்லப்பட்டது என்றும் யாரேனும் அதனால் காயப்பட்டு இருந்தால் தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறி உள்ளார். இதை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

ஏற்றத்தாழ்வை நம்பவில்லை
யுவராஜ் சிங் கூறியதாவது - சாதி, நிறம், மதம் அல்லது பாலின அடிப்படையில் நான் எந்தவிதமான ஏற்றத்தாழ்வையும் நம்பவில்லை என்பதை இது தெளிவுபடுத்தவே இது. நான் மக்களின் நலனுக்காக என் வாழ்க்கையை தொடர்ந்து கொடுத்திருக்கிறேன். நான் வாழ்க்கையில் கண்ணியத்தை நம்புகிறேன், ஒவ்வொரு நபரையும் பாரபட்சம் இல்லாமல் மதிக்கிறேன்.

வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்
நான் எனது நண்பர்களுடன் உரையாடும்போது, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டேன், அது தேவையற்றது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இருப்பினும், ஒரு பொறுப்புள்ள இந்தியர் என்ற முறையில் நான் சொல்ல விரும்புவது யாருடைய உணர்வுகளையாவது நான் தெரியாமல் புண்படுத்தியிருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிற்கும் அதன் அனைத்து மக்களுக்கும் என் அன்பு நித்தியமானது.


Click it and Unblock the Notifications