மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அஜித் அகர்கருடன் யுவராஜ் சிங் எடுத்துக் கொண்ட புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
யோ யோ எனப்படும் கிரிக்கெட் போட்டிக்கான உடற்தகுதி சோதனையில் 3 முறை யுவராஜ் சிங் தோல்வி அடைந்துள்ளார். இந்நிலையில் 4-ஆவது முறையாக நடந்த சோதனையில் நேற்று அவர் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் சச்சின் டெண்டுல்கருடன் வித்தியாசமான கெட்டப்பில், அஜித் அகர்கருடன் இருப்பது போன்ற புகைப்படமாக உள்ளது.
புகைப்படத்தின் பின்னால் உள்ள சூழலை பார்க்கும் போது ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி நடைபெற்ற பார்ட்டி போல் தெரிகிறது. அதில் யுவராஜ் சிங் கருப்பு நிற சட்டையுடன் சிகப்பு தொப்பியில் உள்ளார். சச்சின் டெண்டுல்கரோ தகதகவென ஜொலிக்கும் வெள்ளி நிற தொப்பியில் இரட்டை ஜடைகள் இணைக்கப்பட்ட ஒரு தொப்பியை அணிந்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவுக்காக விளையாட தினமும் கடுமையாக உழைக்கிறேன். 2019-ஆம் ஆண்டு வரை விளையாடலாம் என்ற திட்டம் உள்ளது. 17 ஆண்டுகளாகியும் தோல்வியை மட்டும் சந்தித்து வருகிறேன். இந்த தோல்விகள் நிச்சயம் வலுவாக மாறும்.
தோல்வியை கண்டு எனக்கு பயம் இல்லை. வாழ்க்கையில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ளேன். வெற்றி பெற தோல்வியே முக்கிய காரணமாக உள்ளது என்றார் அவர்.