
மகிழ்ச்சியான கொண்டாட்டம்
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் விழா இன்று நாடு முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளை போல அல்லாமல் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக கொண்டாட்டங்கள் சிறிது மட்டு பட்டாலும் சகோதரத்துவத்தை பிரதிபலிக்கும் இந்த விழா மிகவும் மகிழ்ச்சியாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.

யுவராஜ் நினைவலை
இதையொட்டி கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை சமூகவலைதளங்கள் மூலம் பகிர்ந்துள்ளனர். தன்னுடைய உறவினர்களுடன் தான் செலவழித்த சில அற்புதமான நாட்களை இந்த தினம் நினைவு படுத்துவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். சிறுவயது போல தற்போது அடிக்கடி சந்திக்க முடியவில்லை என்றாலும் தங்களுடைய உறவு பலப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பந்தம் அதிகரித்துள்ளது
மேலும் இந்த நேரத்தில் தன்னலம் இல்லாமல் உழைத்துவரும் மருத்துவ பணியாளர் சகோதரிகளுக்கும் அவர் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதேபோல முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது பதிவில், இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் வித்தியாசமானது என்று கூறியுள்ளார். விலகியிருந்தாலும் தனது சகோதரிகளுடனான பந்தம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உறவினர் இருந்தால் சாத்தியம்
இதனிடையே, முன்னாள் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உடன் பிறந்தவர்களுடன் இருப்பவர்கள் மட்டுமே இந்த பந்தத்தின் உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து சகோதரர் மற்றும் சகோதரிகளுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை அவர் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











