கொழும்பு : இந்திய கிரிக்கெட் அணியின் ரோகித் சர்மாவை எப்போதுமே உருவ கேலி செய்வது சில ரசிகர்கள் பழக்கமாக வைத்திருக்கிறார்கள். ரோகித் சர்மா உடல் பருமனாக இருந்தாலும் அவருடைய பேட்டிங்கில் எரிமலையாக வெடிக்கக் கூடியவர்.
இன்று ரோகித் சர்மா குறித்து பேசிய அஸ்வின் ரோகித் சர்மாவால் மட்டும் தான் எதிரணி கேப்டனுக்கு தூங்கா இரவுகளை வழங்க முடியும் என்று விராட் கோலி ஒரு முறை கூறியதாக தெரிவித்துள்ளார்.

அந்த அளவுக்கு ரோகித் சர்மா தன்னுடைய அதிரடி ஆட்டம் மூலம் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு உயரத்தைத் தொட்டு இருக்கிறார். எனினும் ரசிகர்கள் சிலர் அவரது உடலை உருவ கேலி செய்து சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கிண்டல் செய்வார்கள். இந்த நிலையில் ரோகித் சர்மாவை 2010 ஆம் ஆண்டு யுவராஜ் சிங்கே உருவ கேலி செய்து டிவிட் போட்டு இருப்பது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
2010 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இறுதி போட்டியில் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இறுதிப் போட்டிக்கு முன்பு ரோகித் சர்மா சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தற்போது தான் நாங்கள் பயிற்சியை முடித்துக்கொண்டு வந்திருக்கிறோம்.
நாளை எங்களுக்கு பெரிய நாள். நாங்கள் சிறப்பாக விளையாட எங்களை வாழ்த்துங்கள் என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள யுவராஜ் சிங் குட் லக்! வேகமாக ஓடு குண்டனே என்று பதில் அளித்துள்ளார். யுவராஜ் சிங்கின் என்ற பதில் அப்போது கண்டுகொள்ளப்படவில்லை என்றாலும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.
பலரும் யுவராஜ் சிங் பயன்படுத்திய வார்த்தைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். செல்லமாக பேசுகிறேன் என்ற பெயரில் இவ்வாறு உருவ கேலி செய்யக்கூடாது என்றும் பலரும் வலியுறுத்தி இருக்கிறார்கள். 2010 ஆம் ஆண்டில் வேண்டுமானால் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது சின்ன வார்த்தையை கூட பிரபலங்கள் பார்த்து பேச வேண்டும் என்பதே இது காட்டுகிறது.