கொல்கத்தா: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் நிதிஷ் ராணாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சாஹல், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற புதிய சரித்திரத்தை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள இரு அணிகளும் தலா 5 வெற்றிகள், 6 தோல்விகளுடன் உள்ளது. இதனால் இன்றையப் போட்டியில் தோல்வியடையும் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு முடிவுக்கு வரும் சூழல் உருவாகும்.

இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் பவர் பிளே ஓவர்களுக்குள் ஜேசன் ராய் 10 ரன்களிலும், குர்பாஸ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து வெங்கடேஷ் ஐயர் - கேப்டன் நிதிஷ் ராணா கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்த நிலையில் நிதிஷ் ராணாவின் விக்கெட்டை வீழ்த்துவதற்காக சாஹலை அட்டாக்கில் கொண்டு வந்தார் சஞ்சு சாம்சன். ஏனென்றால் இதுவரை சாஹல் பந்துவீச்சில் 5 முறை நிதிஷ் ராணா ஆட்டமிழந்துள்ளார். அதற்கேற்ப சாஹல் பந்தில் ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து நிதிஷ் ராணா 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சாஹல், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
நிதிஷ் ராணாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரை 184 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருக்கு பின் டுவைன் பிராவோ 183 விக்கெட்டுகளுடன் 2வது இடத்திலும், பியூஷ் சாவ்லா 174 விக்கெட்டுகளுடன் 3வது இடத்திலும், 172 விக்கெட்டுகளுடன் அமித் மிஸ்ரா 4வது இடத்திலும், 171 விக்கெட்டுகளுடன் அஸ்வின் 5வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் நிதிஷ் ராணாவை சாஹல் 6வது முறையாக வீழ்த்தி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.