மும்பை: ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் முதலிடத்தில் உள்ளார். 145 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல், 187 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் எந்த மைதானத்திலும் கட்டுக்கோப்புடன் பந்துவீசும் திறமை கொண்டவர். அதேபோல் 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல் 121 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியுள்ளார்.

ஆனால் ஐசிசி தொடர்கள் என்றாலே சாஹலை இந்திய அணி ஊறுகாய் போல் பயன்படுத்தி வருகிறது. 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இவருக்கு பதில் வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்து பின்னடைவை சந்தித்தது. அதன்பின் 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் தேர்வு செய்தும் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை. இதனால் சாஹலுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் தேர்வு செய்யப்படவில்லை. இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் அக்சர் படேல் பேக் அப் வீரராகவே இருப்பார் என்பதால், ஸ்பின்னர்களாக ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் விளையாடவே வாய்ப்புகள் உள்ளது.
இதற்கு குல்தீப் யாதவின் எழுச்சியே காரணமாக பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் குல்தீப் யாதவின் அபாரமான பந்துவீச்சால் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் இந்திய அணி ஆடிய ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக குல்தீப் யாதவ் உருவெடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.