லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் கலகலப்பான வீரராகவும், சக வீரர்களை எப்போதும் கிண்டல் செய்து மகிழ்ச்சியாக வைத்திருப்பவருமான யுஸ்வேந்திர சாஹல், முதல் முறையாக தனது மன வருத்தத்தை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகா சஜ்தே ஆகியோர் தன்னை பொதுவெளியில் கிண்டல் செய்தது காயப்படுத்தியதாக சாஹல் மறைமுகமாகக் கூறியுள்ளார்.
சமீபத்தில் ராஜ் ஷமானி என்பவரின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யுஸ்வேந்திர சாஹல், தன் மீதான தவறான கண்ணோட்டங்கள் குறித்தும், மக்கள் தன்னைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வது குறித்தும் மனம் திறந்து பேசினார்.

சில காலத்திற்கு முன்பு, ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பஸ்ராவின் "Who's The Boss?" (ஹூ இஸ் தி பாஸ்?) என்ற நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா மற்றும் ரித்திகா சஜ்தே கலந்துகொண்டனர். அப்போது, "சாஹலை ஒரே வார்த்தையில் விவரியுங்கள்" என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.
சாஹலின் பெயர் கேட்டதுமே இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விழுந்து விழுந்து சிரிக்க, ரித்திகா சற்றும் யோசிக்காமல், சாஹலை ஒரு "கார்ட்டூன்" என்று குறிப்பிட்டார். இதைக் கேட்டு நிகழ்ச்சியில் இருந்த ஹர்பஜன் சிங் மற்றும் கீதா பஸ்ராவும் உரக்கச் சிரித்தனர். அத்துடன் நிறுத்திக்கொள்ளாத ரித்திகா, "அவன் எப்போதுமே ஒரு கார்ட்டூன் மாதிரிதான்" என்றும் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ராஜ் ஷமானி சூசகமாக ஞாபகப்படுத்தியபோது, சாஹலின் முகம் சட்டென மாறியது. ஒருவிதமான இறுக்கமான உணர்ச்சியுடன் சில நொடிகள் அமைதியாக இருந்த அவர், ஒரு புன்னகையை மட்டும் பதிலாக அளித்தார். அவர் ரோஹித் அல்லது ரித்திகாவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த மௌனமும், முகபாவமும் அவர் எவ்வளவு காயப்பட்டிருக்கிறார் என்பதைத் தெளிவாக விளக்கியது.
இது குறித்துப் பேசிய சாஹல், "நான் எல்லோரிடமும் சிரித்த முகத்துடன், மரியாதையாகப் பழகுவேன். ஜாலியாகப் பேசுவேன். அதனால், சிலர் என்னைச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். 'இவனிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், இவன் எதுவும் சொல்ல மாட்டான்' என்று நினைக்கிறார்கள்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "எளிதில் வருத்தப்படும் குணம் என்னுடையது அல்ல. ஆனால், மக்கள் என்னை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு விட்டார்கள். நான் விரும்பியபடி என் வாழ்க்கையை வாழ்கிறேன். ஆனால், சில சமயங்களில் சில விஷயங்கள் மனதை கடுமையாகத் தாக்கி, காயப்படுத்துகின்றன," என்று தனது வேதனையைப் பதிவு செய்தார்.
"யாராவது எல்லையைத் தாண்டும்போது உங்களுக்கு வருத்தமாக இருந்திருக்கிறதா?" என்று கேட்டதற்கு, ஒரு மர்மமான புன்னகையுடன், "நான் எல்லாவற்றையும் கவனிக்கிறேன். நான் ஒன்றும் சும்மா செஸ் வீரராக ஆகிவிடவில்லை," என்று பதிலளித்தார்.
இதற்கிடையே, தனது முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மாவுடன் தற்போது தொடர்பில் இல்லை என்பதையும் சாஹல் இந்த நேர்காணலில் உறுதிப்படுத்தினார். தங்களுக்குள் பெரிய சண்டையோ, டிராமாவோ எதுவும் இல்லை என்றும், ஆனால் ஒரு விஷயம் முடிந்துவிட்டால், அதை கடந்த காலமாகவே விட்டுவிடுவதுதான் சரி என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர்களது கடைசி உரையாடல், கடந்த 2024 செப்டம்பர் மாதம் விவாகரத்து தொடர்பான சட்ட ஆலோசனைகளின்போது நடந்ததாக சாஹல் கூறினார். அதன்பிறகு, கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களாக அவர்கள் பேசிக்கொள்ளவில்லை என்றும், எந்தவிதமான உணர்வுபூர்வமான தொடர்புகளும் இன்றி முன்னேறிச் செல்வதே சிறந்தது என்றும் அவர் உணர்வதாகத் தெரிவித்தார்.