டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டனாக, ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளரான, ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு விளையாட ஆரம்பித்தார் ஜாகீர்கான். அந்த அணியில் இவ்வாண்டு ஜாகீர் ஆடுவது 2வது சீசன். இந்நிலையில், அவரை அணி கேப்டனாக நியமித்துள்ளது டீம் நிர்வாகம்.
அணியின் ஆலோசகர் ராகுல் டிராவிட் இதுபற்றி கூறுகையில், இந்திய கிரிக்கெட்டை தொடர்ந்து கவனித்து வருவோருக்கு, அவர் இந்திய அணிக்கு மறைமுகமாக கேப்டன் போல செயல்பட்டது புரிந்திருக்கும். ஜாகீர்கான் ஒரு பெரிய பர்சனாலிட்டி. ஜாகீர் கேப்டனாக்கப்பட்டுள்ளதன் மூலம், அணி வீரர்களுக்கு உத்வேகம் கிடைக்கும்.
வீரர்கள் மத்தியில் பெருமதிப்பு பெற்ற ஜாகீர்கானை, அணி நிர்வாகம் கேப்டனாக்கியுள்ளது வரவேற்கத்தக்கது. ஜாகீர் கானுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தென் ஆப்பிரிக்காவின் டுமினி, கடந்த சீசனில் கேப்டனாக இருந்தார். அணியை வழிநடத்தும் குழுவில் டுமினி இவ்வாண்டும் தொடருவார். ஜாகீருடன் இணைந்து, அணி வெற்றிக்கு டுமினி உழைப்பார் என நம்புகிறேன். இவ்வாறு டிராவிட் தெரிவித்துள்ளார்.
ஜாகீர்கானும், இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, இது மிகப்பெரிய பொறுப்பு எனவும் வர்ணித்துள்ளார். தற்போதுள்ள அணி வீரர்கள் வெற்றிக்கனியை பறிக்க வல்லவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.