பெர்லின்: உலகக் கோப்பை ஸ்பெயினுக்கே கிடைக்கும். ஜெர்மனி தோல்வி அடையும் என ஆக்டோபஸ் மூலம் கணிக்கப்பட்டிருப்பதால் ஜெர்மனி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பால் என்ற ஆக்டோபஸ், கால்பந்து ரசிகர்களிடையே வெகு பிரபலமானது. அப்படி என்ன விசேஷம் என்றால், இந்த ஆக்டோபஸ் கணிப்பின்படியே ஜெர்மனி முன்பு கோப்பையை வென்றது என்பதுதான்.
இந்த ஆக்டோபஸ் ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ளது. அங்குள்ள சீ லைப் அக்குவாரியத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ஆக்டோபஸ், உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின்போது பிசியாகி விடும். யாருக்குக் கோப்பை என்ற கணிப்பை இதன் மூலம் நடத்துவர்.
அதாவது இரண்டு கண்ணாடித்தொட்டிகளில் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள இரு அணிகளின் கொடிகளை நீரில் மிதக்க விட்டு விடுவார்கள். பின்னர் அந்த தொட்டியின் மீது ஆக்டோபஸை விடுவார்கள். அது எந்தத் தொட்டியின் மீது தனது உடலை முழுமையாக படிய வைத்து இருக்கிறதோ அந்த கொடிக்குரிய நாடுதான் வெல்லும் என்பது கணிப்பு.
இந்த ஆக்டோபஸ், இரண்டு முறை ஜெர்மனி ஜெயிக்கும் என முன்பு கணித்தபடியே அது ஜெயித்து கோப்பையை வென்றதால் இந்த ஆக்டோபஸ் கணிப்பு ஜெர்மனியில் பிரபலமாகி விட்டது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் உலகக் கோப்பைப் போட்டியில் யார் சாம்பியன் ஆவார்கள் என்பதை கணிக்க ஆக்டோபஸ் கணிப்பு நடத்தப்பட்டது.
ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாட்டுக் கொடிகள் அடங்கிய தண்ணீர்த் தொட்டி வைக்கப்பட்டது. அதன் மீது ஆக்டோபஸ் விடப்பட்டது. அப்போது ஆக்டோபஸ், ஸ்பெயின் கொடி இருந்த தொட்டியின் மீது முழுமையாக படர்ந்தது.
இந்த ஆக்டோபஸ் கணிப்பு ஜெர்மனி ரசிகர்களை அதிர்த்தி அடைய வைத்துள்ளது. இந்த முறை ஆக்டோபஸ் கணிப்பு பொய்யாகும், ஜெர்மனியே வெல்லும், கோப்பை நமக்குத்தான் என்று அவர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.
நடப்பு உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் ஆஸ்திரேலியா, கானாவுக்கு எதிரான ஜெர்மனி ஆட்டங்களின்போது ஜெர்மனியே வெல்லும் என இந்த ஆக்டோபஸ் கணிப்பு கூறியிருந்தது. இந்த நிலையில் அது ஸ்பெயினை தேர்ந்தெடுத்திருப்பதால் ஜெர்மனி ரசிகர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.
இன்று நடைபெறும் 2வது அரை இறுதிப் போட்டியில் ஜெர்மனியும், ஸ்பெயினும் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]