பெனால்டி ஷூட் அவுட் மூலம் ஜப்பானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பராகுவே காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.உலகக் கோப்பைப் போட்டியில் நேற்று கடைசி இரு ரவுண்ட் 16 போட்டிகள் நடந்தன. ஒரு போட்டியில் பராகுவேயும், ஜப்பானும் மோதின.மிக மிக விறுவிறுப்பான இந்தப் போட்டியில் ஆட்டத்தின் முழு நேரத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. இதையடுத்து கூடுதல்நேரம் தரப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் போடவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் விடப்பட்டது. இந்த உலகக் கோப்பைத் தொடரின் முதல் பெனால்டி ஷூட் அவுட் போட்டி இதுதான்.இதில் பராகுவே 5 கோல்கள் போட்டது. ஆனால் ஜப்பான் 3 கோல்கள் மட்டுமே அடித்ததால், பராகுவே வெற்றி பெற்றது.காலிறுதிப் போட்டிக்கு பராகுவே முன்னேறியது அதன் சரித்திரத்திலேயே இதுதான் முதல் முறையாகும். முன்னதாக போட்டியின் முழு ஆட்டத்திலும் பராகுவேயின் கையே ஓங்கியிருந்தது. ஆனால் ஜப்பானியர்களின் அருமையான ஆட்டத்தால், பராகுவேயால் கோல் ஏதும் போட முடியவில்லை. பெனால்டி ஷூட் அவுட்டின்போது பராகுவேக்காக பரடோ, பரியோஸ், ரிவரோஸ், ஹெய்டோ வால்டஸ், கார்டோஸா ஆகியோர் கோல்கள் அடித்தனர். ஜப்பான் சார்பில் என்டோ, மகோடோ, ஹோண்டா ஆகியோர் கோல் அடித்தனர். யுய்சி கொமோனா தனது வாய்ப்பைத் தவற விட்டதால் பராகுவே வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்குள் நுழைந்துள்ள பராகுவே, காலிறுதிப் போட்டியில், ஸ்பெயினை சந்திக்கவுள்ளது.