கோல் அடித்தபின் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத மெஸ்ஸி.. காரணம் கால்பந்து அல்ல என உருக்கமான விளக்கம்
கான்சாஸ் சிட்டி: அல்ஜீரியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் கோல் அடித்த பிறகு, தான் மைதானத்தில் கண்ணீர் வடித்ததற்கான காரணம் கால்பந்து சார்ந்தது அல்ல என்று அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அல்ஜீரியாவுக்கு எதிரான குரூப் ஜே பிரிவு லீக் ஆட்டத்தில், லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து அர்ஜென்டினாவை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெறச் செய்தார். அத்துடன் உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் (16 கோல்கள்) சாதனையைச் சமன் செய்தார். இந்த ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்த பிறகு மெஸ்ஸி மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களைக் குழப்பமடையச் செய்தது.

இது குறித்து போட்டிக்குப் பிறகு பேசிய 38 வயதான மெஸ்ஸி, "நான் அழுததற்கும் கால்பந்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கடந்த சில நாட்களாக நான் தனிப்பட்ட முறையில் மிகவும் கடினமான மற்றும் சிக்கலான சூழ்நிலைகளைக் கடந்து வந்தேன். அது விளையாட்டுடன் தொடர்பில்லாத ஒரு விஷயம். இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு ஆதரவாக நின்று, எனது மனநிலையைச் சரியாகப் பராமரிக்க உதவிய எனது சக வீரர்கள் மற்றும் அர்ஜென்டினா நிர்வாகக் குழுவினருக்கு நான் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
தனது தற்போதைய கால்பந்து வாழ்க்கை குறித்துப் பேசிய அவர், "எனது கால்பந்து வாழ்க்கையில் நான் கண்ட வெற்றிகள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. தற்போது நான் அனுபவித்து வரும் இந்த காலகட்டம் எனது வாழ்க்கையின் உச்சகட்ட மகிழ்ச்சியான தருணமாகும். இந்த அற்புதமான அணியுடன் இணைந்து விளையாடுவதை நான் மிகவும் ரசித்து வருகிறேன்" என்று கூறினார்.
அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி பேசுகையில், "லியோனல் மெஸ்ஸி குறித்துப் பேச என்னிடம் வார்த்தைகளே இல்லை. அவர் ஒரு அசாத்தியமான வீரர்" என்று பாராட்டினார். மெஸ்ஸியின் இந்த உருக்கமான பேட்டி தற்போது உலக கால்பந்து ரசிகர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications
