
பலம் வாய்ந்த நான்கு அணிகள்
பிரேசிலில், உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 12ம்தேதி துவங்கி நடந்து வருகிறது. லீக் சுற்று மற்றும் நாக்-அவுட் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், பிரேசில், அர்ஜெண்டினா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய பலம் வாய்ந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

ஆட்டத்தில் அனல்
முதலாவது அரையிறுதி போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு பெலோஹரிசான்ட் நகரிலுள்ள மைதானத்தில் தொடங்குகிறது. இதில் பிரேசிலும், ஜெர்மனியும் மோதுகின்றன. பிரேசில் லீக் ஆட்டங்களில் தடுமாறினாலும், நாக்-அவுட் சுற்றில் எழுச்சி பெற்றது. இதனால் இவ்விரு அணிகளும் மோதும் போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நெய்மர் இல்லை, கேப்டனும் கிடையாது
பிரேசில் எழுச்சி பெற்றாலும் கூட அந்த அணிக்கு கெட்ட நேரம்போல. நாக்அவுட் சுற்றில் கொலம்பியாவுடன் மோதிய போது அதன் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் முதுகில் அடிபட்டு உலக கோப்பை தொடரைவிட்டே வெளியேற்றப்பட்டார். போதாத குறைக்கு, அணியின் கேப்டன் டி.சில்வா, மஞ்சள் அட்டை பெற்றதன் காரணமாக, அரையிறுதியில் விளையாட முடியாமல் போய்விட்டது. டேவிட் லூயிஸ் அரையிறுதிக்கான பிரேசில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். நெய்மருக்குப் பதிலாக பிரேசில் அணியின் ஸ்டிரைக்கராக வில்லியன் அல்லது பெர்னார்டு இருவரில் ஒருவர் களமிறங்கலாம் எனத் தெரியவந்துள்ளது

பலம் வாய்ந்த ஜெர்மனி
ஜெர்மனி அணியை பொறுத்தளவில் அது மிகவும் பலமானதாக உள்ளது. இருப்பினும் லத்தின் அமெரிக்கா நாடுகளில் இதற்கு முன்பு நடைபெற்ற 6 உலக கோப்பை தொடர்களில் ஒன்றில் கூட ஐரோப்பிய அணிகள் வென்றது கிடையாது என்பது ஜெர்மனிக்கு பாதகமான விஷயமாகும். ஜெர்மனி நடப்பு உலக கோப்பை போட்டித்தொடரில் மோதிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கானாவுடனான போட்டி மட்டும் டிராவில் முடிவடைந்தது. ஆனால் இதுவரை அந்த அணி லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றையும் இந்த தொடரில் எதிர்கொள்ளவில்லை. பிரேசில்தான் அது சந்திக்கும் முதல் லத்தின் அமெரிக்க நாடாகும்.

அடிப்பார்களோ என்று அச்சம்
ஜெர்மனியின் பயிற்சியாளர் ஜோக்கிம் லோயிவ் கூறுகையில், பிரேசிலியர்கள் ஸ்டைல் எதிரி நாட்டு வீரர்களை தாக்குவதுதான். அரையிறுதியிலும் அதுபோல ஜெர்மனி வீரர்களை தாக்க பிரேசில் வீரர்கள் முயல்வார்கள். எனவே நடுவர்கள் உறுதியான நடவடிக்கை எடுத்து அதுபோன்ற வீரர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும். பிரேசிலில் டெக்னிக்கலாக சிறப்பாக விளையாடும் வீரர்கள் உள்ளபோதிலும், ஆட்டத்தின் மீது நம்பிக்கை வைக்காமல் எதிரி நாட்டு வீரர்களை தாக்குவதில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று அஞ்சுகிறோம்.

பழி வாங்க ஜெர்மனி திட்டம்
லத்தின் அமெரிக்க நாடுகளை அவர்களின் சொந்த நாட்டில் வீழ்த்த முடியாது என்ற நிலைமையை ஜெர்மனி மாற்றிக்காண்பிக்கும். அதற்கு தேவையான பயிற்சிகளை வீரர்களுக்கு அளித்துள்ளேன். இவ்வாறு ஜெர்மனி பயிற்சியாளர் தெரிவித்தார். ஜெர்மனியைப் பொறுத்தவரை முன்களம், பின்களம், நடுகளம் என எல்லா பக்கமும் திறமையான வீரர்கள் உள்ளனர். எனவே 2002 இறுதிச் சுற்றில் பிரேசிலிடம் அடைந்த தோல்விக்கு பழி வாங்க இதுதான் சரியான சந்தர்ப்பம் எனக் காத்திருக்கின்றனர் ஜெர்மனி அணியினர்.


Click it and Unblock the Notifications













