ஃப்ளோரிடா : 2024 கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோதின. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர்கள் லியோனல் மெஸ்ஸி ஒரு கோல் ஆவது அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த போட்டியின் இடையே அவருக்கு கணுக்காலில் மோசமான காயம் ஏற்பட்டது. அதற்கு முதல் உதவி செய்து கொண்டு அவர் தொடர்ந்து விளையாடினார். ஆனால், அந்த காயம் மோசமானது.
அவரது கால் மோசமாக வீங்கியதால் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார் மெஸ்ஸி. அதனால் ரசிகர்கள் சோகமானார்கள். இதன் இடையே போட்டியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. மெஸ்ஸி 64-வது நிமிடத்தில் ஆடுகளத்தை விட்டு வெளியேறி இருந்தார். அப்போது வரை இரு அணிகளும் கோல் அடிக்காமல் இருந்தன. போட்டி நேரமான 90 நிமிடங்கள் முடிவடைந்தும் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இதை அடுத்து 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போது 97வது நிமிடத்தில் மற்றொரு நட்சத்திர வீரரான மார்டினெஸ்-ஐ அர்ஜென்டினா உள்ளே அனுப்பியது. அவர் 112 வது நிமிடத்தில் கோல் அடித்து போட்டியில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதை அடுத்து ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா 1 - 0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணியை வீழ்த்தியது.
அர்ஜென்டினாவின் சூப்பர் ஹீரோவாக மாறினார் மார்டினெஸ். அவர் இந்த தொடரில் மொத்தம் ஐந்து கோல் அடித்து கோல்டன் பூட் விருதையும் வென்றார். அர்ஜென்டினா அணி 16வது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையை வென்று வரலாற்று சாதனை செய்தது. மேலும் 2021 கோபா அமெரிக்கா கோப்பை, 2022 கால்பந்து உலகக் கோப்பை மற்றும் 2024 கோபா அமெரிக்கா கோப்பை என தொடர்ந்து மூன்று பெரிய தொடர்களில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது.