மும்பை: இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீது விதித்திருந்த தடையை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு நீக்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீது இடைகால தடையை ஃபிபா போட்டது.
மூன்றாவது தரப்பினரின் தலையீட்டால் இந்திய கால்பந்து கூட்டமைப்பு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்ததையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு ( AIFF ) நீண்ட வருடங்களாக தேர்தலே நடத்தப்படாமல் உள்ளது. இதனையடுத்து AIFF-ன் சட்டதிட்டங்களை மாற்றி அமைக்கவும், தேர்தலை விரைந்து நடத்தவும் 3 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் நியமித்திருந்தது. இந்த குழு தான் அனைத்து முடிவுகளையும் எடுத்தது. இது FIFA-ன் விதிக்கு புறம்பானது என்பதால் இந்தியா மீது தடை போட்டனர். இதனால் இந்திய அணியின் அனைத்து போட்டிகளும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் அந்த இடைக்கால தடை 12 நாட்களுக்கு பிறகு நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், 3 பேர் கொண்ட அந்த குழுவை உடனடியாக நீக்குவதற்கு உத்தரவிட்டது. மேலும் வரும் செப்டம்பர் 2ம் தேதியன்று இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியா மீதான தடை நீக்கப்பட்டிருந்ததால் இந்தியாவில் நடைபெறவிருந்த ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் 30ம் தேதி வரை இந்த உலகக்கோப்பை தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.