ரியோடி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்து போட்டி காலிறுதியில், இன்று நடைபெறும் பிரான்சுடனான போட்டியில் ஜெர்மனி அணி வெற்றி பெறும் என்று நெல்லி யானை கணித்துள்ளது.

கடந்த உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின்போது 'பால்' என்று பெயரிடப்பட்ட ஆக்டோபஸ், அணிகளின் வெற்றியை கணித்தது. தண்ணீர் தொட்டிக்குள், விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகளை வைத்து ஆக்டோபஸ் அதில் எந்த கொடியை தொடுகிறதோ அந்த கொடியையுடைய நாடுதான் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது. ஆக்டோபஸ் தொட்ட கொடிக்குறிய நாடுதான் அன்றைய போட்டிகளில் வெற்றி பெற்று வந்தது. இந்நிலையில் போட்டித்தொடர் முடிந்த சில நாட்களிலேயே ஆக்டோபஸ் உயிரிழந்தது.
விளையாட்டு ஆர்வலர்களின் மனக் குறையை நீக்க ஒரு உயிரினம் ரெடியாகிவிட்டது. ஜெர்மனியில் உள்ள 'நெல்லி' என்ற பெயர் கொண்ட யானைதான் இந்த உலக கோப்பையின் 'ஜோதிட திலகம்'. ஆக்டோபசும், இதே ஜெர்மனி நாட்டில் உருவானதுதான் என்பதால், நெல்லி மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் ஏறியுள்ளது.
இந்த நெல்லி யானை பல வருடங்களாகவே இதற்காக பயிற்சி பெற்றுவருகிறது. 2006ம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலக கோப்பை, 2010ம் ஆண்டில் நடைபெற்ற ஆண்கள் உலக கோப்பை, 2012ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர்களில் பெரும்பாலான போட்டிகளை சரியாக கணித்துள்ளது. மொத்தம் 33 போட்டிகளில் 30 ஆட்டங்களில் நெல்லியின் கணிப்பு அப்படியே பலித்துள்ளது. எனவே கணிப்பு பரிட்சையில் நெல்லி, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டதாகவே கூறப்படுகிறது.
யானையின் இரு பக்கங்களிலும், 2 கோல் கம்பங்களை நட்டுவைக்கிறார்கள். கோல் கம்பங்களின் மீது இரு நாடுகளின் தேசிய கொடியை ஓட்டுகிறார்கள். இதன்பிறகு நெல்லி யானையின் காலுக்கடியில், கால்பந்து ஒன்றை வைக்கிறார்கள். அந்த பந்தை யானை எந்த நாட்டு கொடி ஒட்டப்பட்ட கோல்கம்பத்துக்குள் அடிக்கிறதோ, அந்த நாடு அன்றைய போட்டியில், வெற்றி பெறும் என்று கணிக்கிறார்கள். இரு கோல்கம்பத்துக்கும் நடுவே காலியிடத்தில் பந்து சென்றால், பந்தையம் டிரா ஆவது உறுதியாம்.
அதன்படி ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போட்டிகளை கணிக்குமாறு நெல்லியிடம் கேட்டுள்ளனர். நெல்லி ஜெர்மனி தேசியக்கொடி ஒட்டப்பட்ட கோல் கம்பத்திற்குள் பந்தை தட்டிவிட்டுள்ளது. இதன் மூலம், ஜெர்மனி வெற்றி பெறும் என்ற குஷியிலுள்ளனர் அந்த நாட்டு ரசிக சிகாமணிகள்.