மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில், கொலம்பியா மற்றும் போலந்து அணிகள் மோதின. இதில் தோல்வி அடையும் அணி வெளியேறும் என்ற நிலையில் கொலம்பியா 3-0 என வென்றது.
21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் இன்றுடன் முடிகிறது. இதனால் இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
முக்கியமான பெரிய அணிகள் சொதப்பி வரும் நிலையில் அறிமுக மற்றும் குட்டி அணிகள் மாஸ் காட்டி விளையாடி வருகிறது. இன்றைய ஆட்டத்தில், கொலம்பியா மற்றும் போலந்து அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது. எச் பிரிவில் நடந்த இந்த ஆட்டம் இது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளும் எச் பிரிவில் மிகவும் மோசமான நிலையில் இருந்தன.
தொடக்கத்திலேயே தோல்வியை தழுவி இரு அணிகளும் அதிர்ச்சி அளித்தன. கொலம்பியா அணியில் உள்ள வீரர்கள் தனி தனியாக செய்யும் தவறுகள் காரணமாக, அந்த அணி தோல்வியை தழுவியது. அதே சமயத்தில், போலந்து அணி, சரியான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாத காரணத்தால் தோல்வியை தழுவியது.
எச் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஜப்பான் 2-1 என கொலம்பியாவை வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் செனகல் 2-1 என போலந்தை வென்றது. இன்று நடந்த ஆட்டத்தில் ஜப்பான் 2-2 என செனகலுடன் டிரா செய்தது. அதையடுத்து தலா 4 புள்ளிகளுடன் ஜப்பான் மற்றும் செனகல் உள்ளன.
இன்று நடைபெற்ற எச் பிரிவின் இரண்டாவது ஆட்டத்தில் போலந்து, கொலம்பியா மோதின. இதில் 3-0 என கொலம்பியா வென்றது. இதன் மூலம் இரண்டு தோல்விகளை சந்தித்த போலந்து பிரிவு சுற்றுடன் வெளியேறியது.
அடுத்த சுற்றுக்கு முன்னேற 4 புள்ளிகளுடன் உள்ள ஜப்பான், செனகல் மற்றும் 3 புள்ளிகளுடன் உள்ள கொலம்பியா அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இன்று நடந்த ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் எர்ரி மினா கோலடிக்க கொலம்பியா 1-0 என முன்னிலை பெற்றது. பால்கோ 70வது நிமிடத்தில் கோலடிக்க கொலம்பியா 2-0 என முன்னிலையை அதிகரித்தது. 75வது நிமிடத்தில் ஜூவான் குவாட்ராடோ அணியின் மூன்றாவது கோலை அடித்தார்.