எட்டோ சக்தியுடன் களமிறங்கும் காமரூன் - தப்புமா ஜப்பான்?

எவ்வளவு பெரிய சிங்கமாக இருந்தாலும் சாதாரண முள் குத்தினால் அதற்கும் வலிக்கத்தான் செய்யும். அப்படித்தான் தன்னைச் சுற்றிலும் ஏகப்பட்ட சிங்கங்கள் வீர நடை போட்டாலும், அதை சற்றும் பொருட்படுத்தாமல், நெருஞ்சி முள்ளாக மாறி அமர்க்களம் செய்தது காமரூன்- 20 ஆண்டுகளுக்கு முன்பு.
1990 உலகக் கோப்பை போட்டியை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த தொடரில் காமரூன் அணி காலிறுதி வரை முன்னேறி அனைவரையும் வியக்க வைத்தது. காலிறுதி வரை முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையையும் அன்று அது படைத்தது. அந்த அணியின் அன்றைய அமர்க்கள வெற்றி நடைக்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரோஜர் மில்லா.
காலிறுதிப் போட்டி வரை வந்த காமரூன், காலிறுதியில் கடுமையாக போராடி தோல்வியைத் தழுவி வெளியேறியது.
அந்தத் தொடருக்குப் பின்னர் காமரூன் அணியும் ஒரு நட்சத்திர அணியாக மாறி விட்டது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடைபெறும் முதலாவது உலகக் கோப்பைப் போட்டியில் பெரும் நம்பிக்கையுடன் இன்று தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை சந்திக்கிறது காமரூன்.
நட்சத்திர வீரர் சாமுவேல் எட்டோவின் அட்டகாச ஆட்டத்தைக் காண காமரூன் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஆப்பிரிக்க ரசிகர்களும் படு ஆவலாக காத்துள்ளனர்.
1990ல் ரோஜர் மில்லா நிகழ்த்திய சாகசத்தைப் போல எட்டோவும், இந்த உலகக் கோப்பைத் தொடரில் அசத்துவார் என அணியின் பயிற்சியாளர் பால் லீ கியூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தர வரிசைப் பட்டியலில் 19வது இடத்தில் உள்ளது காமரூன். 45 வது இடத்தில் ஜப்பான் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 4 முறை மோதியுள்ளன. அதில் 2 முறை காமரூனும், இரு போட்டிகள் டிராவிலும் முடிந்துள்ளன.
காமரூன் அணிக்கு எதிராக இதுவரை ஜப்பான் ஒரு கோல் கூட போட்டதில்லை. ஆனால் ஜப்பானுக்கு எதிராக காமரூன் 4 கோல்கள் அடித்துள்ளது.
மில்லாவை எட்டோ ஓவர் டேக் செய்வாரா, ஜப்பானை நெம்பி எடுப்பாரா என்பது இன்று இரவு தெரிய வரும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications