சோச்சி: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி - ஸ்வீடன் இடையிலான போட்டி அதிரடியாக முடிந்தது 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி திடீர் வெற்றியை சுவைத்தது.
ஆட்டம் தொடங்கியது முதலே ஜெர்மனியின் கோலடிக்கும் முயற்சிகளை லாவகமாக தடுத்து வந்தது ஸ்வீடன். இந்த நிலையில், 30வது நிமிடத்தில் அழகான கோலைப் போட்டது ஸ்வீடன். விக்டர் கிளீசன் எடுத்துக் கொடுக்க வலது காலால் அதை உதைத்து கோலாக்கினார் ஓலா டோய்வோனன்.
முதல் பாதியில் ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்ட நிலையில் 2வது பாதி ஆட்டத்தில் ஜெர்மனி ஒரு கோலடித்தது. 47வது நிமிடத்தில் மார்கோ ரூயஸ் அபாரமான கோலடித்து சம நிலைக்குக் கொண்டு வந்தார். அதன் பின்னர் இரு அணிகளும் கோலடிக்க எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. மாறி மாறி இரு தரப்பும் கோல் முயற்சிகளை தடுத்து விட்டன.
2ம் பாதி ஆட்டத்தின் இறுதி நிமிடத்திற்கு முன் வரை இதுடிராவில்தான் முடிவதாக இருந்தது. ஆனால் 94வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் டோனி க்ரூஸ் அதிரடியாக கோலடித்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்து விட்டார். ரசிகர்கள் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. சாம்பியன் போல ஆடிய ஜெர்மனி கடைசி நேரத்தில் வெற்றியைத் தட்டிப் பறித்து ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்து விட்டது.
முன்னதாக எப் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் தென்கொரியாவை மெக்சிகோ வீழ்த்தியது. எப் பிரிவில் இதுவரை நடந்த போட்டிகளில் மெக்சிகோ 1 - 0 என ஜெர்மனியை வென்றது. ஸ்வீடன் 1 - 0 என தென்கொரியாவை வென்றது.
இந்த உலக் கோப்பையில் எப் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது மெக்சிகோ. இரண்டாவது ஆட்டத்தில் ஸ்வீடன் 1-0 என தென்கொரியாவை வென்றது.
இதுவரை பிரேசில் மட்டுமே அதிகபட்சமாக 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த முறை தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை வெல்வதுடன் பிரேசில் சாதனையை சமன் செய்யும் இலக்குடன் ஜெர்மனி களமிறங்கியுள்ளது. ஆனால் முதல் ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.