மும்பை டீம் வலிமையானதுதான்... ஆனா நாங்க ஒண்ணும் வீக் இல்ல... சென்னையின் எப்சி அணி கோச் உறுதி
பேம்போலிம், கோவா : ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 22வது போட்டியில் நாளைய தினம் சென்னையின் எப்சி மற்றும் மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதவுள்ளன.
மும்பை சிட்டி அணி வலிமையானது தான் என்று தெரிவித்துள்ள சென்னையின் அணி பயிற்சியாளர் சிசாபா லாஸ்லோ ஆனால் சென்னையின் அணி வீக்கானது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல மும்பை சிட்டி அணியின் கோச் செர்ஜியோ லோபெரா கூறுகையில், தாங்கள் புள்ளிகள் பட்டியல் குறித்தெல்லாம் சிந்திப்பதில்லை என்றும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதே லட்சியம் என்றுள்ளார்.

20 போட்டிகள் நிறைவு
ஐஎஸ்எல் 2020-21 தொடர் துவங்கி 20 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இன்றைய போட்டியில் பெங்களூரு எப்சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணிகள் மோதவுள்ளன. கோவாவின் பேடோர்டா மைதானத்தில் இந்த போட்டி இன்றிரவு நடைபெறவுள்ளது.

மும்பை -சென்னையின் அணி மோதல்
நாளைய தினம் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் சென்னையின் எப்சி மற்றும் மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று முதலிடத்தை தக்க வைத்துள்ள மும்பை சிட்டி அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்க திட்டமிட்டுள்ளது.

புள்ளிகள் பட்டியல் குறித்து கவலையில்லை
இந்நிலையில், அடுத்தடுத்த வெற்றிகளை மட்டுமே கணக்கில் கொண்டு விளையாடி வருவதாகவும் புள்ளிகள் பட்டியலை பற்றி கவலைப்படுவதில்லை என்றும் மும்பை அணியின் கோச் செர்ஜியோ லோபெரா தெரிவித்துள்ளார். அணியின் அகமது ஜாஹோ, ஹூகோ போமஸ் உள்ளிட்ட வீரர்களை இந்த தொடரில் அவர் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்.

சென்னையின் அணி வீக் இல்லை
இதனிடையே மும்பை சிட்டி அணி வலிமையானது தான், ஆனால் சென்னையின் அணி வீக்கானது இல்லை என்று சென்னையின் கோச் சிசாபா லாஸ்லோ தெரிவித்துள்ளார். மும்பை அணியின் பலம் குறித்து தங்களுக்கு தெரியும் என்றும் அதையொட்டி தங்களது நாளைய போட்டி இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

வலிமையாக உள்ளோம்
ஜாம்ஷெட்பூருக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி கொண்ட சென்னையின் அணி, அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்துள்ளது. இதுவரை இரண்டு முறை ஐஎஸ்எல் கோப்பைகளை வெற்றி கொண்டுள்ள சென்னையின் அணி மும்பைக்கு எதிராக கோல்களை அடிக்கும் வகையில் மிகவும் வலிமையாக உள்ளதாகவும் கோச் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications