
ஐதராபாத் அணி வெற்றி
ஐஎஸ்எல் 2020-21 சீசனின் 29வது போட்டி நேற்றைய தினம் வாஸ்கோவின் திலக் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், அதில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் மற்றும் ஐதராபாத் எப்சி அணிகள் மோதின. இதில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணி ஈஸ்ட் பெங்கால் அணியை வெற்றி கொண்டுள்ளது.

வீணான மகோமா முயற்சி
ஈஸ்ட் பெங்கால் அணியின் ஜாக்குவஸ் மகோமா இரண்டு கோல்களை அடித்த நிலையில், வெற்றி வாய்ப்பு காணப்பட்டது. ஆனால் அவரின் அந்த முயற்சியை தகர்க்கும்வகையில், ஐதராபாத் அணியின், அரிடேன் மற்றும் ஹலிச்சரண் ஆகியோர் அடித்த கோல்களால் வெற்றி அவர்களது வசம் சென்றது.

களத்தில் தவறும் வீரர்கள்
இந்நிலையில் தொடரில் இதுவரை போட்டியிட்ட 4 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது ஈஸ்ட் பெங்கால் அணி. இதனிடையே இந்த தோல்வியால் அதிருப்தி அடைந்துள்ள அணியின் கோச் ராபி பௌலர், பயற்சி ஆட்டங்களின்போது சிறப்பாக செயல்படும் வீரர்கள் அதை களத்தில் செய்ய தவறுவதாக கூறியுள்ளார்.

பௌலர் குழப்பம்
வீரர்களுக்கு பயிற்சியை எங்கிருந்து துவங்குவது என்று தெரியவில்லை என்றும், தங்களது அணி வீரர்கள் ஐஎஸ்எல் தொடரின் தரத்திற்கு இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தாங்கள் சிறப்பாக பயிற்சி அளித்து வருவதாகவும் அதை தவிர்த்து வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். வீரர்களின் தேர்வு சரியாக இல்லை என்றும் அவர் கூறினார்.

வீரர்கள் தடுமாற்றம்
போட்டியின் முதலில் சிறப்பாகவே தங்களது துவக்கம் இருந்ததாகவும் ஆனால் போகப் போக அவர்களின் செயல்பாடுகள் குறைந்ததால் அணி தோல்வி அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லீக் போட்டிகளில் இருந்து இந்த தொடரில் விளையாட வந்திருக்கும் வீரர்கள் அதன் தரத்துடன் போட்டியிட முடியாமல் தடுமாறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications













