கொல்கத்தா: இந்திய கால்பந்து அணி சில ஆண்டுகளாக மிகப்பெரிய தோல்விகளை சந்தித்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் இன்டர் கான்டினென்டல் கோப்பையில் இந்திய அணி சிரியா அணிக்கு எதிராக 0 - 3 என்ற கோல் கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. மொரிசியஸ் போன்ற பலவீனமான அணிக்கு எதிராக டிரா செய்தது.
இந்த மோசமான செயல்பாடுகளை அடுத்து இந்திய கால்பந்து அமைப்பில் என்னதான் நடக்கிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து இந்திய கால்பந்து ஜாம்பவான் பாய்சங் பூட்டியா அதிரடியான பல தகவல்களை கூறி இருக்கிறார். "இந்த தோல்விகள் நல்ல விஷயம் இல்லை. நாம் கடந்த சில காலமாக சரிவை மட்டுமே சந்தித்து வருகிறோம். முதல் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இருந்த நாம் இப்போது 125 வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்."

"இந்திய கால்பந்துக்கு புதிய நிர்வாக அமைப்பு, புதிய தேர்தல்கள் மற்றும் புதிய துவக்கம் தேவை என நான் நினைக்கிறேன். இல்லை எனில் இது மேலும் சரிவை மட்டுமே சந்திக்கும். இந்த விளையாட்டை எப்படி முன்னேற்றுவது என தீவிரமான ஆலோசனைகள் மற்றும் வாக்குவாதங்கள் தேவை என நான் நினைக்கிறேன். கால்பந்து அமைப்பின் விதிகள் மாற்றப்பட வேண்டும். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கும் என நான் நம்புகிறேன்."
"கால்பந்து அமைப்புக்கு புதிய விதிகள், புதிய உறுப்பினர்கள் மற்றும் புதிய தேர்தல் நிச்சயம் தேவை. இந்திய கால்பந்து அணியை எப்படி முன்னேற்றுவது என சிந்திக்க வேண்டிய நேரம் இது. 2046 ஆம் ஆண்டுக்குள் என்ன செய்ய வேண்டும் என ஒரு காகிதத்தில் எழுதி மட்டும் வைத்துக் கொண்டால் போதாது. அதை நாம் செயல்படுத்த வேண்டும். ஒரு சமூக சேவை அமைப்பை போல கால்பந்து அமைப்பு செயல்படுவதை நிறுத்த வேண்டும்."
"கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இந்த விளையாட்டை சரிவில் தள்ளி உள்ளது. நான் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்று இருந்தேன். அப்போது கால்பந்து பற்றி விவாதிப்பதற்கு பதிலாக, பாஸ்டர் பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து அவர்கள் விவாதித்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு கால்பந்து அமைப்பின் வேலை சமூக விஷயங்களில் கவனம் செலுத்துவது மட்டும் இல்லை. தேசிய அணி மற்றும் ஜூனியர் அணிகளின் செயல்பாடுகளை முன்னேற்றுவது தான் அவர்களின் முக்கிய வேலை. அதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்." இவ்வாறு பாய்சங் பூட்டியா கூறி இருக்கிறார்.