மும்பை: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணம் முடிவடைந்துள்ள நிலையில், கொல்கத்தாவில் நடந்த கசப்பான சம்பவங்களுக்கு ஏற்பாட்டாளர்களை மட்டும் குறை சொல்வதை விடுத்து, மெஸ்ஸி மீதும் தவறு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மெஸ்ஸியின் 'GOAT India Tour' ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லியில் சிறப்பாக நடந்தாலும், கொல்கத்தாவில் அது கலவரத்தில் முடிந்தது. ரசிகர்கள் நாற்காலிகளை உடைத்து, பாட்டில்களை வீசித் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

இந்தச் சம்பவம் குறித்து 'ஸ்போர்ட்ஸ்டார்' இதழில் எழுதியுள்ள சுனில் கவாஸ்கர், ஒரு மாறுபட்ட கோணத்தை முன்வைத்துள்ளார். "கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, எல்லோரும் ஏற்பாட்டாளர்கள் மீது பழி போடுகிறார்கள். ஆனால், மெஸ்ஸி தனது வாக்குறுதியைக் காப்பாற்றினாரா? என்று யாரும் கேட்பதில்லை.
அவர் என்ன ஒப்பந்தம் செய்தார் என்று நமக்குத் தெரியாது. ஆனால், அவர் மைதானத்தில் ஒரு மணி நேரம் இருக்க ஒப்புக்கொண்டு, வெறும் 20 நிமிடங்களில் கிளம்பிச் சென்றிருந்தால், பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்களை ஏமாற்றிய 'உண்மையான குற்றவாளி' அவரும், அவரது குழுவினரும்தான்" என்று கவாஸ்கர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
விஐபிக்கள் சூழ்ந்து கொண்டது குறித்துப் பேசிய கவாஸ்கர், "ஆம், அரசியல்வாதிகள் மற்றும் விஐபிக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர் என்பது உண்மைதான். ஆனால், அவருக்கு அங்கு ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்ததா? இல்லவே இல்லை.
அவர் சும்மா மைதானத்தை வலம் வந்திருக்கலாம் அல்லது ஒரு பெனால்டி கிக் அடித்திருக்கலாம். அவர் அதைச் செய்திருந்தால், அவரைச் சுற்றியிருந்தவர்கள் தானாக விலகியிருப்பார்கள். ரசிகர்களும் தாங்கள் எதற்காக வந்தோமோ, அந்தத் தரிசனத்தைப் பெற்றிருப்பார்கள்" என்று தனது வாதத்தை முன்வைத்தார்.
ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்ததைச் சுட்டிக்காட்டிய கவாஸ்கர், "அங்கு வாக்குறுதிகள் காப்பாற்றப்பட்டன. அதனால் பிரச்சனை இல்லை. எனவே, கொல்கத்தா மக்களைக் குறை சொல்வதற்கு முன்பு, இரு தரப்பிலும் ஒப்பந்தம் சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டதா என்பதை ஆராய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் மெஸ்ஸி வந்திறங்கியதும், அவரை அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் விஐபிக்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால் டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு மெஸ்ஸி தெரியவில்லை. நிகழ்ச்சி அமைப்பாளர் சதத்ரு தத்தா மைக்கில், "தயவு செய்து அவரை விடுங்கள்" என்று கெஞ்சியும் யாரும் கேட்கவில்லை.
சவுரவ் கங்குலி வருவதற்குள் நிலைமை மோசமானது. வெளியே காத்திருந்த ஷாருக்கான் நிகழ்ச்சியை ரத்து செய்தார். முதல்வர் மம்தா பானர்ஜி பாதியிலேயே திரும்பினார். இறுதியில் 22 நிமிடங்களில் மெஸ்ஸி வெளியேறியது ரசிகர்களின் ஆத்திரத்தைத் தூண்டியது.