கோவா : ஒடிசா எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே ஆன போட்டியில் இரு அணிகளும் சரி சமமாக மோதின.
இறுதியில் பெங்களூரு எஃப்சி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது.
ஒடிசா அணி இந்தப் போட்டியில் தன் பாணியை மாற்றி ஆடியது. கடந்த ஐந்து போட்டிகளில் இல்லாத அளவு ஆக்ரோஷமாக ஆடியது அந்த அணி. ஆனாலும், அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை.

பெங்களூரு அணியின் இரண்டு கோல்களை சுனில் சேத்ரி மற்றும் கிளேடன் சில்வா அடித்து இருந்தனர். ஒடிசா அணியின் கேப்டன் ஸ்டீவன் டெய்லர் அந்த அணியின் ஒரு கோலை அடித்து இருந்தார்.
இரண்டு அணிகளும் தாக்குதல் பாணியில் போட்டியைத் துவக்கி இருந்தாலும், பெங்களூரு அணி பின்னர் தாக்குதலில் சுணங்கியது. பின்னர் சுதாரித்த கேப்டன் சுனில் சேத்ரி 38வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
71வது நிமிடத்தில் ஒடிசா அணி தன் முதல் கோலை அடித்தது. அடுத்த எட்டு நிமிடங்களில் பெங்களூரு அணி அடுத்த கோலைஅடித்து 2 - 1 என போட்டியில் முன்னிலை பெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பெங்களூரு அணி 6 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஒடிசா அணி பத்தாவது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு அடுத்ததாக மோசமாக ஆடி வரும் ஈஸ்ட் பெங்கால் அணி மட்டுமே உள்ளது.