கோவா : சென்னையின் எஃப்சி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு எஃப்சி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் பெங்களூரு அணி இந்த சீசனில் தன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் பெங்களூரு அணி டிரா மட்டுமே செய்தது. அந்த அணியின் தாக்குதல் திட்டங்கள் நிறைவேறவில்லை. இந்த நிலையில், சென்னை அணிக்கு எதிராக அந்த அணி சிறப்பாக செயல்பட்டது.
இந்தப் போட்டியில் இரு அணிகளாலும் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் பெங்களூரு அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது.
அந்த அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சிறப்பாகசெயல்பட்டு எளிதாக கோல் அடித்தார். 56வது நிமிடத்தில் அந்த கோல் அடிக்கப்பட்டது. அடுத்து 60வது நிமிடத்திலும் பெங்களூரு அணிக்கு ஒரு கோல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது வெற்றி பெறவில்லை.
சென்னை அணி கடைசி நிமிடங்களில் போட்டியை டிரா செய்ய கடுமையாக போராடியது. எனினும்,அந்த அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
போட்டியின் முடிவில் பெங்களூரு அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இரண்டு அணிகளுமே மூன்று லீக் போட்டிகளில் ஆடி முடித்துள்ளன. இதில் பெங்களூரு அணி 5 புள்ளிகளையும், சென்னை அணி 4 புள்ளிகளையும் பெற்றுள்ளன.