கோவா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசனில் மும்பை எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் இடையே சுவாரசியமான போட்டி நடைபெற உள்ளது.
இரண்டு அணிகளுமே பந்தை அதிக முறை ஒரு வீரரிடம் இருந்து மற்ற வீரருக்கு பாஸ் செய்வதை அடிப்படையாக கொண்டே தங்கள் திட்டத்தை வகுத்து உள்ளன.
இரண்டு அணிகளும் தங்கள் முதல் போட்டியில் அதிக முறை பந்தை பாஸ் செய்து மிரள வைத்தன.
மும்பை எஃப்சி அணியின் புதிய பயிற்சியாளராக, கோவா அணியின் முன்னாள் பயிற்சியாளர் செர்ஜியோ லொபேரா இந்த சீசன் முதல் பதவி ஏற்றுள்ளார். அவரது தாரக மந்திரமே பந்தை அதிக முறை பாஸ் செய்ய வேண்டும். பந்தை அதிக நேரம் தக்க வைக்க வேண்டும் என்பது தான்.
இந்த சீசனின் மும்பை அணியை அதன் முதல் போட்டியிலேயே தன் பாணியை அப்படியே பின்பற்றச் செய்தார். ஆனாலும், அந்த அணி தோல்வி அடைந்தது. எனினும், அவர் தன் பாணியை மாற்ற மாட்டார்.
தங்கள் முன்னாள் பயிற்சியாளரின் அதே பாணியைத் தான் கோவா அணி இன்னும் பின்பற்றி வருகிறது. இந்த சீசனில் கோவா அணியின் பயிற்சியாளராக ஜுவான் பெர்ராண்டோ பதவி ஏற்ற பின்னும் தங்கள் பழைய பயிற்சியாளரின் பாணியை பின்பற்றி ஆடுகிறது கோவா.
மும்பை அணி நார்த் ஈஸ்ட் அணிக்கு எதிரான தங்களின் முதல் போட்டியில் 451 பாஸ் செய்து மிரட்டியது. கோவா அணி, பெங்களூரு அணிக்கு எதிராக 2 - 2 என டிரா செய்யப்பட்ட போட்டியில் 448 பாஸ் செய்து இருந்தது.
இரண்டு அணிகளுமே தங்கள் எதிரணியை விட இரண்டு மடங்கு பந்தை பாஸ் செய்து பந்தை அதிக நேரம் தக்க வைத்து இருந்தன. இப்படி பந்தை பாஸ் செய்வதை குறிக்கோளாக கொண்ட இரு அணிகள் மோதும் போட்டி எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.