கோவா : பெங்களூரு அணி இரண்டு கோல்கள் அடித்து போட்டியின் கடைசி சில நிமிடங்கள் வரை முன்னிலையில் இருந்தும் போட்டியை டிராவில் முடித்தது.
ஹைதராபாத் அணி சிறப்பாக செயல்பட்டு 86 மற்றும் கூடுதல் நேரத்தில் கோல்கள் அடித்து தோற்க வேண்டிய போட்டியை டிரா செய்தது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் கோவாவில் மூடப்பட்ட மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஹைதராபாத் எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே ஆன லீக் போட்டி நடைபெற்றது.
கடந்த சில போட்டிகளில் மோசமாக ஆடி வந்த பெங்களூரு அணி இந்தப் போட்டியில் அந்த நிலையை மாற்ற முழு முயற்சி எடுத்தது, கேப்டன் சுனில் சேத்ரி 9வது நிமிடத்தில் கோல் அடித்தார். 61வது நிமிடத்தில் லியோன் அகஸ்டின் அசத்தல் கோல் அடித்தார்.
பெங்களூரு அணி 2 - 0 என முன்னிலை பெற்று 85வது நிமிடம் வரை போட்டியை தன்வசம் வைத்திருந்தது. 86வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் அரிடேன் சான்டானா கோல் அடித்தார். அடுத்து கூடுதல் நேரத்தில் பிரான்செஸ்கோ சண்டாசா மற்றொரு கோல் அடிக்க ஹைதராபாத் அணி போட்டியை 2 - 2 என சமன் செய்தது.
வெற்றி பெறுவோம் என நம்பி வந்த பெங்களூரு அணி போட்டியை டிரா செய்து அதிர்ச்சியில் ஆழ்ந்தது. ஹைதராபாத் அணி தொடர்ந்து நான்காம் இடத்தில் நீடிக்கிறது. பெங்களூரு அணி தொடர்ந்து ஏழு போட்டிகளில் வெற்றி இன்றி தவித்து புள்ளிப் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது.