கோவா : 2020 - 21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஜாம்ஷெட்பூர் எஃப்சி இடையே ஆன போட்டி நடைபெற்றது.
அந்தப் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி அதிரடியாக மூன்று கோல் அடித்து வெற்றி பெற்றது.
ஜாம்ஷெட்பூர் அணி போராடி இரண்டு கோல்கள் அடித்தது. எனினும், அந்த அணி தோல்வி அடைந்தது.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணி ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்ற நிலையில் இந்தப் போட்டியில் பங்கேற்றது.
கேரளா அணி 22வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. அதைத் தொடர்ந்து 26வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி கோல் அடித்து பதிலடி கொடுத்தது.
முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 1 - 1 என சமநிலையில் இருந்தன. அதன் பின் போட்டியின் முடிவுக்கே அருகே சென்ற போது மீண்டும் கோல்கள் அடிக்கப்பட்டன. 79 மற்றும் 82வது நிமிடங்களில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி கோல்களை அடித்து 3 - 1 என போட்டியை மாற்றியது.
அடுத்த இரு நிமிடங்களில் ஜாம்ஷெட்பூர் அணி ஒரு கோல்அடிக்க போட்டியில் விறுவிறுப்பு கூடியது. எனினும், அதன் பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. கேரளா அணி ஆட்ட நேர முடிவில் 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இது இந்த சீசனில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் இரண்டாவது வெற்றி ஆகும். மேலும், மூன்று புள்ளிகளையும் பெற்றது அந்த அணி.