கோவா : ஜாம்ஷெட்பூர் எஃப்சி - நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி இடையே ஆன லீக் போட்டி கோவாவில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நார்த் ஈஸ்ட் அணி அபார வெற்றி பெற்றது. கடந்த ஏழு போட்டிகளில் வெற்றி பெற முடியாமல் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி தவித்து வந்த நிலையில் அதற்கு முடிவு கட்டி உள்ளது.
இந்த வெற்றிக்கு மற்றொரு காரணமும் உள்ளது. அந்த அணி தங்களின் பயிற்சியாளரை மாற்றி இருந்தது. புதிய பயிற்சியாளராக கலீத் ஜம்லில் பொறுப்பேற்ற நிலையில், அவரது முதல் போட்டியிலேயே அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் நார்த் ஈஸ்ட் அணியின் அஷுதோஷ் மேதா 36வது நிமிடத்தில் கோல் அடித்தார். அடுத்து தேஷோர்ன் பிரவுன் 61வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் கேப்டன் ஸ்டீபன் ஹார்ட்லி 89வது நிமிடத்தில் கோல் அடித்து தன் அணிக்கு ஆறுதல் அளித்தார்.
ஆட்ட நேர முடிவில் 2 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி.
இந்த தோல்வியின் மூலம் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்து பரிதாப நிலையை எட்டி உள்ளது ஜாம்ஷெட்பூர் அணி. மறுபுறம் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடத்தை எட்டிப் பிடித்துள்ளது.
நார்த் ஈஸ்ட் அணி அடுத்ததாக முதல் நான்கு இடங்களில் இடம் பிடித்து பிளே-ஆஃப் முன்னேற தன் போராட்டத்தை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.