கோவா: 2020 - 21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றில் மும்பை சிட்டி எஃப்சி அணி, சென்னையின் எஃப்சி அணியை சந்திக்க உள்ளது.
இந்தப் போட்டியில் முதல் இடத்தில் இருக்கும் மும்பை சிட்டி அணி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அணி தன முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும், அதன் பின் தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
அத்தனைக்கு போட்டியாக கருதப்படும் ஏடிகே மோகன் பகான் அணி ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததை அடுத்து மும்பை அணி முதல் இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மும்பை சிட்டி அணி கடைசி மூன்று போட்டிகளில் ஒரு கோல் கூட விட்டுக் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தமே ஒரு கோல் மட்டுமே அந்த அணி விட்டுக் கொடுத்துள்ளது. இதன் மூலம், மும்பை அணி லீக்சுற்றின் முதல் பகுதியில் அச்சுறுத்தும் அணியாக வலம் வருகிறது.
மறுபுறம் சென்னையின் எஃப்சி அணி மோசமான நிலைக்கு சென்று கொண்டுள்ளது. முதல் போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய சென்னையின் எஃப்சி அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளது.
இந்த நிலையில், வலுவான மும்பை அணியை சென்னை வீழ்த்தினால் நம்பிக்கை பெற்று தொடரில் மீண்டு வரும் வாய்ப்பை பெறும்.