கோவா : ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது அந்த அணி.
நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணி தான் ஆடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் இரண்டு டிரா செய்து 5 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஈஸ்ட் பெங்கால் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், இந்தப் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த அணியின் பயிற்சியாளர் ராபி பௌலர் இரண்டு போட்டிகளின் தோல்விகளும் தனிநபர்கள் செய்த தவறுகளால் தான் நேர்ந்தது என கூறி உள்ளார். எனினும், அவருக்கு கடும் அழுத்தம் உள்ளது. லிவர்பூல் அணியின் ஸ்ட்ரைக்கராக இருந்தவர் என்பதால் ராபி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதே சமயம், ஈஸ்ட் பெங்கால் அணி குறைந்த காலத்தில் தான் தன் முதல் ஐஎஸ்எல் சீசனுக்கு தயார் ஆனது. அதனால், இரண்டு போட்டியின் தோல்வி இதுவரை அந்த அணியை பெரிதாக பாதிக்கவில்லை.
அந்த அணி ஐந்து கோல்களை விட்டுக் கொடுத்தது தான் பெரிய சிக்கலாக உள்ளது. இத்தனைக்கும் ராபி தடுப்பாட்டத்தை தான் பெரிய அளவில் முன்னிறுத்தி வியூகம் அமைத்து இருந்தார்.
நார்த் ஈஸ்ட் அணி கடந்த சீசன்கள் போல இல்லாமல் இந்த முறை துவக்கத்திலேயே நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடி வருகிறது. அந்த அணியை வீழ்த்துமா ஈஸ்ட் பெங்கால்?