106வது போட்டி
ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 106வது போட்டி நேற்றைய தினம் வாஸ்கோடகாமாவின் திலக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜாம்ஷெட்பூர் எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதின. ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்திற்கான இந்த மோதலில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் வெற்றி பெற்றுள்ளது.
ஆதிக்கம் செலுத்திய ஜாம்ஷெட்பூர்
நேற்றைய போட்டி ஆரம்பத்தில் இருந்தே மிகவும் த்ரில்லாக சென்றது. இந்நிலையில் இரண்டாவது பகுதியில் ஜாம்ஷெட்பூர் அணி சிறப்பாக விளையாடியது. அந்த அணியின் ஸ்டீபன் ஈஸ், செய்மின்லென் டோங்கல் மற்றும் டேவிட் கிராண்ட் ஆகியோரின் அடுத்தடுத்த கோல்கள் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.
சுனில் சேத்ரி 100வது கோல்
இதனிடையே பெங்களூருவும் இரண்டாவது பகுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் பிரான்சிஸ்கோ கோன்சாலெஸ் மற்றும் சுனில் சேத்ரி ஆகியோர் 9 நிமிட வித்தியாசத்தில் அடுத்தடுத்த கோல்களை அடித்தனர். இந்த கோல் சுனில் சேத்ரியின் 100வது கோல் ஆகும். ஆயினும் அந்த அணியின் டிபன்ஸ் மிகவும் மோசமாக இருந்தது.
கைகொடுக்காத மாற்றங்கள்
இந்த போட்டியில் ஜாம்ஷெட்பூர் வீரர் டோங்கல் இந்த சீசனில் தனது முதல் கோலை அடித்துள்ளார். இடைவேளைக்கு பிறகு பெங்களூரு அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து அந்த அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. ஆயினும் அதன் முயற்சிகள் வீணானது.