தோற்றாலும் இதயங்களை வென்றனர்.... சபாஷ் போட வைத்த ஜப்பான்!
மாஸ்கோ: இந்த கால்பந்து உலகக் கோப்பையில் எதிர்பார்த்த அணிகள் தோல்வி அடைந்து வெளியேறினாலும், பலருடைய இதயங்களை நொறுங்க வைத்தது ஜப்பானின் தோல்வி. தோல்வி அடைந்தாலும் உலக மக்களின் இதயங்களை கவர்ந்ததுடன், புதிய பாடத்தையும் கற்றுத் தந்துள்ளது ஜப்பான் அணி.
21வது ஃபிபா உலகக் கோப்பை ரஷ்யாவில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட பல்வேறு முக்கிய அணிகள் தோல்வி அடைந்து வெளியேறின. இது கால்பந்து ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று நடந்த நாக் அவுட் சுற்றில் மிகவும் வலுவான பெல்ஜியம் அணியுடன் ஜப்பான் மோதியது. முதல் பாதியில் மிகச் சிறந்த தடுப்பாட்டத்தின் மூலம் பெல்ஜியத்தை கோலடிக்க விடாமல் தடுத்தது.
இரண்டாவது பாதியில் தொடர்ந்து இரண்டு கோல்களை அடித்து பெல்ஜியத்துக்கு அதிர்ச்சியும் அளித்தது. அதன்பிறகு பெல்ஜியம் இரண்டு கோல்கள் அடித்து சமநிலையை உருவாக்கியது. ஆட்டத்தின் கடைசி விநாடியில் கோலடிக்க பெல்ஜியம் வென்றது.

எதிர்பாராத தோல்வி
மிகவும் சிறப்பாக விளையாடி, பெல்ஜியத்தை திக்குமுக்காட வைத்த ஜப்பானின் இந்த தோல்வி மைதானத்தில் மிகப் பெரிய அமைதியை ஏற்படுத்தியது. இந்த உலகக் கோப்பையில் இருந்த கடைசி ஆசிய அணியான ஜப்பானும் வெளியேறியது.

அசத்திய ஜப்பான்
ஆனால் அதற்குப் பிறகு ஜப்பான் வீரர்கள் செய்த காரியம் தான், தற்போது ரஷ்யாவில் மட்டுமல்ல உலகெங்கும் பேச வைத்துள்ளது. தாங்கள் தங்கியிருந்த அறையில் இருந்து வெளியேறினர் ஜப்பான் வீரர்கள்.

சுத்தம் செய்தனர்
அதற்கு முன், அந்த அறையை சுத்தப்படுத்திவிட்டு, ரஷ்ய மொழியில் `ஸ்பாசிபோ' என்று எழுதி வைத்து சென்றனர். இதற்கு தேங்க் யூ என்று அர்த்தம். தோல்வியடைந்த போதும், தங்களுடைய நாட்டின் கலாசாரமான தூய்மையை மறக்காத ஜப்பான் வீரர்களின் இந்த செய்கையை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.

பாடம் கற்றுத் தந்தது
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்தப் போட்டியைப் பார்க்க மைதானத்துக்கு வந்த ஜப்பான் ரசிகர்களும், மைதானத்தை சுத்தப்படுத்திவிட்டு சென்றதுதான் ஹைலைட். தூய்மை என்பது அவர்களுடைய ரத்தத்தில் ஊறியுள்ளது. நேரம் தவறாமை, சுறுசுறுப்புக்கு பெயர் பெற்றவர்கள் ஜப்பானியர்கள். ஆட்டத்தில் வலுவான அணிக்கு சவால்விடுத்த ஜப்பானியர்கள், சுத்தத்தின் அருமையை உலகுக்கு பாடமாக சொல்லிக் கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications