மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் எச் பிரிவில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் வென்றது.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.
இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு ஆட்டங்கள் முடிந்துள்ளன. இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடிகிறது.
இந்த நிலையில், கடைசியாக உள்ள எச் பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் முதல் ஆட்டத்தில் கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் போலந்தும், செனகலும் சந்திக்கின்றன.
----
பிரிவு எச்
ஜப்பான் - கொலம்பியா
2 - 1
----
* உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 11 ஆட்டங்களில் 2ல் மட்டுமே ஜப்பான் வென்றுள்ளது.
* இதுவரை விளையாடிய 5 முதல் ஆட்டங்களில் ஜப்பான் ஒன்றில் மட்டும் வென்றுள்ளது. ஒரு டிரா, 3 தோல்விகளை கண்டுள்ளது.
* கொலம்பியா இதுவரை விளையாடியுள்ள 18 ஆட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு கோலாவது அடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா 33, ஆஸ்திரியா 29 ஆட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு கோலாவது அடித்துள்ளன.
---
கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் விளையாடியதே கொலம்பியாவின் மிகச் சிறந்த இடமாகும். கடுமையாக போராடக் கூடிய அணியாக கொலம்பியா உள்ளது. 2014ல் ஜேம்ஸ் ரோட்ரிகுஸ் தனி ஆளாக, அணியை காலிறுதி வரை அழைத்துச் சென்ற ஆட்டத் திறனை யாரும் மறக்க முடியாது.
2002, 2012ல் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் விளையாடிய ஜப்பான், கடந்த உலகக் கோப்பையில் பிரிவு சுற்றிலேயே வெளியேறியது. கடந்த உலகக் கோப்பையிலும் கொலம்பியா மற்றும் ஜப்பான் ஒரே பிரிவில் இருந்தன. கடைசி லீக் ஆட்டத்தில் வென்றால், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் கொலம்பியாவுடன் ஜப்பான் மோதியது. அதில் 4-1 என கொலம்பியா வென்றது. அதனால் ஜப்பான் பிரிவு சுற்றிலேயே வெளியேறியது.
இந்த உலகக் கோப்பையில் எச் பிரிவில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் கொலம்பியாவும் ஜப்பானும் மோதின. கடந்த உலகக் கோப்பையில் கொலம்பியாவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில், துவக்கத்தில் இருந்தே ஜப்பான் வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.
ஆட்டத்தின் 61 சதவீத நேரம் பந்தை தங்கள் வசமே வைத்திருந்த ஜப்பான், 14 முறை கோலடிக்கும் வாய்ப்பை உருவாக்கியது. அதில் 5 முறை கோல் பகுதிக்கு பந்தை செலுத்தி, கொலம்பியாவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அதே நேரத்தில் கொலம்பியாவுக்கு 8 முறை கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் 3 முறை மட்டுமே கோல் பகுதிக்கு பந்து சென்றது.
ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ககாவா முதல் கோல் அடிக்க ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது. கோலடித்து சமநிலையை உருவாக்க வேண்டும் என்று கொலம்பியா வீரர்கள் அவசரப்பட்டதால் பல தவறுகளை செய்தனர். 12 பவுல்களை அவர்கள் செய்தனர்.
இதற்கிடையில் குயின்டரோ கோல் அடிக்க கொலம்பியா 1-1 என சமநிலையை உருவாக்கியது. அப்பாடா தோல்வியில் இருந்து தப்பிவிட்டோம் என்று கொலம்பியா நினைத்தது.
இதெல்லாம் எங்களுக்கு போதாது என்று பசியோடு இருந்த ஜப்பான் வீரர்கள் முன்பைவிட அதிக வேகத்துடனும் விவேகத்துடனும் விளையாடினர். அதற்கு பலனும் கிடைத்தது. 73வது நிமிடத்தில் ஒசாகா மற்றொரு கோலை அடிக்க ஜப்பான் மீண்டும் முன்னிலை பெற்றது. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று 3 புள்ளிகளைப் பெற்றது ஜப்பான்.