டெல்லி: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணத்தின் கடைசி நாளான இன்று (திங்கட்கிழமை), தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கச் சந்திப்பு நடைபெற்றது. ஐசிசி தலைவரும், பிசிசிஐயின் முக்கியப் புள்ளியுமான ஜெய் ஷா, லியோனல் மெஸ்ஸியைச் சந்தித்து, அவருக்கு விலைமதிப்பற்ற ஒரு பரிசை வழங்கினார்.
'GOAT India Tour' பயணமாக டெல்லி வந்த மெஸ்ஸியை, மைதானத்தில் ஜெய் ஷா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் டிடிசிஏ தலைவர் ரோகன் ஜெட்லி ஆகியோர் வரவேற்றனர். இந்தச் சந்திப்பின் முக்கிய தருணமாக ஐசிசி தலைவர் ஜெய் ஷா, மெஸ்ஸிக்கு 2026-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான டிக்கெட்டைப் பரிசாக வழங்கி, அவரைப் போட்டிகளை காண வருமாறு நேரில் அழைப்பு விடுத்தார். கிரிக்கெட் உலகில் நடக்கும் மிகப் பெரிய தொடருக்கு, கால்பந்து உலகின் முன்னணி வீரரை அழைத்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

அதுமட்டுமின்றி, ஜெய் ஷா மெஸ்ஸிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியையும், கையெழுத்திடப்பட்ட ஒரு கிரிக்கெட் பேட்டையும் நினைவுப் பரிசாக வழங்கினார். மெஸ்ஸியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வெவ்வேறு விளையாட்டை சேர்ந்த இரு ஆதிக்க சக்திகள் ஒரே மேடையில் இணைந்தது வரலாற்றுத் தருணமாக அமைந்தது.
சுமார் 30 நிமிடங்கள் மைதானத்தில் இருந்த மெஸ்ஸி, ரசிகர்களிடம் பேசுகையில், "நீங்கள் காட்டும் அன்பிற்கு நன்றி. இது ஒரு தனித்துவமான அனுபவம். நேரம் குறைவாக இருந்தாலும், உங்கள் அன்பு என்னை நெகிழ வைத்துள்ளது. நாங்கள் நிச்சயம் மீண்டும் இந்தியா வருவோம், ஒருவேளை ஒரு போட்டியில் விளையாடக்கூட வரலாம்" என்று நம்பிக்கையளித்தார்.
சுவாரஸ்யமாக, மைதானத்தில் ரியல் மாட்ரிட் ஜெர்சி அணிந்து வந்த சில ரசிகர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மினர்வா அகாடமி வீரர்களுடன் கால்பந்து விளையாடியும், ரசிகர்களுக்குப் பந்துகளைப் பரிசளித்தும் மெஸ்ஸி டெல்லி ரசிகர்களை மகிழ்வித்தார். மெஸ்ஸியின் இந்த இந்தியப் பயணம், கொல்கத்தா சர்ச்சையைத் தாண்டி, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லியில் இனிமையான நினைவுகளுடன் நிறைவு பெற்றது.