அரை சதம் அடித்த கால்பந்து வீரர் கிங் காஜூ’
டோக்கியோ: டோணி, பெடரர், விஸ்வநாதன் ஆனந்த் போன்றோருக்கு வயதாகிவிட்டது, ஓய்வு பெற்றுவிடலாம் என்று பலர் விமர்சனம் கூறிவரும் வேளையில், 50 வயதாகும் கால்பந்து வீரரை, ஜப்பான் கால்பந்து கிளப் ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இது விளையாடுவதற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை நிரூபித்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த கஜூயோஷி மியூரா, தேசிய அணிக்காக விளையாடியவர். அடுத்த மாதம், 51 வயதை நிறைவு செய்யும் அவரை, ஜப்பானின் புகழ்பெற்ற யோகஹாமா கால்பந்து கிளப் அணி, மேலும் ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

முன்கள வீரரான, கிங் காஜூ, தன்னுடைய 15வது வயதில், பிரேசில் சென்று கால்பந்து பயிற்சி மேற்கொண்டார். ஜப்பான் திரும்பிய அவர், 1990ல் தேசிய அணிக்காக விளையாடத் துவங்கினார். 2000ம் ஆண்டு வரை, விளையாடிய அவர் 89 சர்வதேசப் போட்டிகளில், 55 கோல்களை அடித்துள்ளார்.
இதனிடையில், ஜப்பான் கால்பந்து அணிகளுக்காகவும் அவர் விளையாடி வந்தார். யோகஹாமா கால்பந்து அணிக்காக, 2005ல் இருந்து விளையாடி வருகிறார். தற்போது, உள்ளூர் போட்டிகளில், 33வது ஆண்டாக விளையாடுவதற்கு யோகஹாமா அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.
1993ல் சிறந்த ஆசிய வீரர் உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ள கிங் காஜூ, கடந்தாண்டு, அதிக வயதில் கால்பந்து போட்டியில் விளையாடியவர் என்ற சாதனையுடன், அதிக வயதில் கோலடித்தவர் என்ற சாதனையையும் புரிந்தார்.
Story first published: Monday, January 15, 2018, 16:50 [IST]
Other articles published on Jan 15, 2018


Click it and Unblock the Notifications