கொல்கத்தா: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் கலவரத்தைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியின் முதன்மை ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கொல்கத்தா போலீஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ரசிகர்களுக்கு டிக்கெட் பணம் திருப்பித் தரப்படும் என்று போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மெஸ்ஸியின் 'GOAT India Tour' பயணத்தின் முதல் நாளே கொல்கத்தாவில் பெரும் தோல்வியில் முடிந்தது. சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸியைச் சரியாகப் பார்க்க முடியாத ஆத்திரத்தில் ரசிகர்கள் மைதானத்தை அடித்து நொறுக்கினர்.

கொல்கத்தா நிகழ்ச்சியில் ஏற்பட்ட களேபரத்தைத் தொடர்ந்து, சதத்ரு தத்தா அங்கிருந்து ஹைதராபாத் செல்ல முயன்றார். அப்போது கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்தே அவரை போலீஸார் தடுத்து நிறுத்தித் தங்களது காவலில் எடுத்தனர். இதனை மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) ராஜீவ் குமார் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். சரியான திட்டமிடல் இல்லாதது, பாதுகாப்பு குறைபாடு மற்றும் ரசிகர்களை ஏமாற்றியது போன்ற புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து டிக்கெட் வாங்கிய ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வி, "எங்கள் பணம் என்னவாகும்?" என்பதுதான். இது குறித்து டிஜிபி ராஜீவ் குமார் கூறுகையில், "ஏற்பாட்டாளரிடம் இருந்து நாங்கள் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியைப் பெற்றுள்ளோம். விற்கப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளுக்கான பணமும் ரசிகர்களுக்குத் திருப்பித் தரப்படும். இந்த மோசமான நிர்வாகத்திற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்றார்.
இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் கூறுகையில், "ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விரிவான விசாரணை நடத்த மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார். சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜாவேத் ஷமீம் பேசுகையில், "சதத்ரு தத்தா ஏற்கனவே போலீஸ் காவலில் உள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது. ரசிகர்களுக்குப் பணம் கிடைப்பதை போலீஸார் உறுதி செய்வார்கள்" என்று தெரிவித்தார்.
கொல்கத்தாவில் இவ்வளவு பெரிய விபரீதம் நடந்த நிலையில், மெஸ்ஸி தற்போது ஹைதராபாத் சென்றுள்ளார். ஆனால், நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வேண்டிய சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டதால், ஹைதராபாத் மற்றும் மும்பையில் நடைபெறவிருந்த மெஸ்ஸியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. மெஸ்ஸியை வைத்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்ட நினைத்த ஒரு தனியார் நிறுவனத்தின் மெத்தனப் போக்கால், சர்வதேச அளவில் இந்தியாவிற்கும், மேற்கு வங்க விளையாட்டுத் துறைக்கும் பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.