மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி காலமானார்.. கால்பந்து ரசிகர்கள் இரங்கல்
ரொசாரியோ: அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி, தீவிர உடல்நலக்குறைவு காரணமாக தனது 68-வது வயதில் காலமானார். அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஆகஸ்ட் 8-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அர்ஜென்டினா ஊடகங்கள் மற்றும் மெஸ்ஸியின் சிறுவயது கிளப்பான நெவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் உறுதி செய்துள்ளன.
லியோனல் மெஸ்ஸியின் கால்பந்து பயணத்திற்குப் பின்னால் மிக முக்கிய நபராக இருந்தவர் அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி. ரொசாரியோ நகரில் பிறந்த மெஸ்ஸியின் திறமையை சிறுவயதிலேயே கண்டறிந்து, பார்சிலோனா அணிக்கு அழைத்துச் சென்று உலகப் புகழ்பெற்ற வீரராக மாற்றியதில் ஜார்ஜின் பங்கு அளப்பரியது. மெஸ்ஸியின் ஆரம்பக்கால வாழ்க்கை முதல் பார்சிலோனா, பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன், இன்டர் மியாமி மற்றும் அர்ஜென்டினா தேசிய அணிக்கான பயணங்கள் வரை அனைத்தையும் அவரே ஒரு ஏஜென்டாக இருந்து வழிநடத்தி வந்தார்.

கடந்த 2026 கால்பந்து உலகக்கோப்பைத் தொடரின் போதே ஜார்ஜ் மெஸ்ஸியின் உடல்நிலை மோசமடைந்து வந்தது. அப்போது அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டிக்குப் பின் மெஸ்ஸி மைதானத்திலேயே உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் சிந்திய நிகழ்வு ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. அப்போது பேசிய மெஸ்ஸி, "நான் அழுததற்கு கால்பந்து காரணமல்ல, என் தனிப்பட்ட வாழ்க்கையில் சில கடினமான நாட்களைக் கடந்து வருகிறேன்" என்று தெரிவித்திருந்தார். அது அவரது தந்தையின் உடல்நிலையை குறித்து தான் என தகவல் கூறப்பட்டது.
தனது தந்தையின் தீவிர உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, கடந்த ஜூலை மாத இறுதியில் நடைபெற்ற போட்டிகளையும் மெஸ்ஸி தவிர்க்க நேரிட்டது. கால்பந்து விளையாட்டின் மிகச்சிறந்த வீரரை உருவாக்கிய ஜார்ஜ் மெஸ்ஸியின் மறைவுக்கு சர்வதேச கால்பந்து ரசிகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
லியோனல் மெஸ்ஸி 2026 கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக ஆடி இருந்தார். அந்தப் போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெற்றதை அடுத்து தோல்வியால் துவண்டு இருந்த மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவரது தந்தையின் மறைவு அவருக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
