கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு "லஸ்ஸி" செய்தி.. மீண்டும் விளையாட வருகிறார் மெஸ்ஸி!
பார்சிலோனா: கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டுப் போன அர்ஜென்டினா சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி தனது முடிவைத் திரும்பப் பெற்றுள்ளார். மீண்டும் அர்ஜென்டினாவுக்காக விளையாடப் போவதாக அறிவித்துள்ளார்.
உலகெங்கும் மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் கடந்த ஜூன் மாதம் சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் மெஸ்ஸி. இதனால அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மெஸ்ஸி தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாரடோனா உள்ளிட்ட பல முன்னாள் ஜாம்பவான்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தொடர்ந்து அர்ஜென்டினாவுக்காக தான் விளையாடவிருப்பதாக மெஸ்ஸி கூறியுள்ளார்.

என்னால் பாதிப்பு வரக் கூடாது
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அர்ஜென்டினா கால்பந்தில் பல பிரச்சினைகள் நிலவுவதாக அறிகிறேன். அது என்னால் இருக்கக் கூடாது என்றும் விரும்புகிறேன்.
தொடர்ந்து விளையாடுவேன்
அர்ஜென்டினா கால்பந்துக்கு என்னால் எந்தப் பாதிப்பும் வரக் கூடாது. எனது கோல்கள் அணிக்கு உதவியாக இருந்துள்ளன. எனவே தொடர்ந்து அர்ஜென்டினாவுக்காக ஆடுவேன் என்று கூறியுள்ளார் மெஸ்ஸி.

மகிழ்ச்சி
மெஸ்ஸி மீண்டும் அர்ஜென்டினா அணிக்காக ஆடப் போவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோபா அமெரிக்கா இறுதி
கடந்த ஜூன் மாதம் நடந்த கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் சிலியிடம் அர்ஜென்டினா தோற்றுப் போனது. இந்த விரக்தியில் ஓய்வை அறிவித்திருந்தார் மெஸ்ஸி என்பது நினைவிருக்கலாம்.

ஏமாற்றத்தில்
மேலும் 2014 உலகக் கோப்பைப் போட்டியிலும் மெஸ்ஸியால் அர்ஜென்டினாவுக்கு தோல்விதான் பரிசாக கிடைத்தது. இதுவும் அவரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருந்தது.

ரசிகர்களுக்கு நிம்மதி
தற்போது மெஸ்ஸி தனது முடிவைக் கைவிட்டுள்ளார். மீண்டும் விளையாடப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் அர்ஜென்டினா அணி நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கும் பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

அடுத்த மாதம் விளையாடுகிறார்
ஓய்வு முடிவை மெஸ்ஸி கைவிட்டுள்ளதால் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் உருகுவே, வெனிசூலா நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் அர்ஜென்டினாவுக்காக ஆடவுள்ளார்.


Click it and Unblock the Notifications