ஹைதராபாத்: மெஸ்ஸியின் இந்தியப் பயணத்தின் முதல் நாள், கொல்கத்தாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்துடன் தொடங்கினாலும், ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி இனிமையான நினைவுகளுடன் முடிவடைந்தது. கொல்கத்தா ரசிகர்கள் செய்த ரகளையால் ஏமாற்றமடைந்த மெஸ்ஸிக்கு, ஹைதராபாத் ரசிகர்கள் மற்றும் தெலுங்கானா அரசு சிறப்பான வரவேற்பையும், கண்ணியமான உபசரிப்பையும் அளித்தனர்.
இந்தியாவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் கால்பந்து உலகின் உச்ச நட்சத்திரம் மெஸ்ஸி முதல் நாளான சனிக்கிழமை அன்று காலை கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்கள் முன் தோன்றினார். ஆனால், அப்போது ரசிகர்கள் அத்துமீறியதால் வெறும் 22 நிமிடங்களில் மெஸ்ஸி அங்கிருந்து வெளியேறினார். அவர் சென்ற பிறகு அந்த மைதானம் கலவர பூமியாக மாறியது. மெஸ்ஸியை பார்க்க முடியாததால் ரசிகர்கள் ஆவேசம் அடைந்து அங்கு இருந்த பொருட்களை நாசம் செய்தனர்.

இந்த நிலையில், அதே நாள் மாலையில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் (உப்பல்) மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சி எவ்வித சர்ச்சையும் இன்றி கோலாகலமாக நடைபெற்றது. உப்பல் மைதானத்தில் முதலில் ஆர்ஆர்9 (RR9) மற்றும் அபர்ணா ஆல்-ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெற்றது.
இதில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி களமிறங்கி விளையாடியது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது. மாற்று வீரராகக் களமிறங்கிய அவர், ஒரு கோல் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் RR9 அணி வெற்றி பெற்றது.
லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோருடன் மெஸ்ஸி மைதானத்திற்கு வந்ததும் அரங்கம் அதிர்ந்தது. இடையே மெஸ்ஸி, பந்தை லாவகமாக உதைத்து கோல் போஸ்ட்டுக்குள் தள்ளினார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
குழந்தைகளுடன் நடந்த பெனால்டி ஷூட்-அவுட் நிகழ்ச்சியில் மெஸ்ஸி மற்றும் அவரது நண்பர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். பின்னர் குழந்தைகளுடன் வட்டமாக நின்று பந்தைக் கடத்தும் 'ராண்டோ' (Rondo) பயிற்சியிலும் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் பாதியில் நின்ற 'மைதான வலம்' ஹைதராபாத்தில் முழுமையாக நடைபெற்றது. மெஸ்ஸி மைதானத்தை வலம் வந்து ரசிகர்களுக்கு கையசைத்தார். சில பந்துகளை தன் பாணியில் உதைத்து ரசிகர்களை நோக்கி அனுப்பினார்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மைதானத்திற்கு வருகை தந்து மெஸ்ஸியைச் சந்தித்தார். மேடையில் மெஸ்ஸிக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டியும், லூயிஸ் சுவாரஸ்க்கு ராகுல் காந்தியும் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் மைக் பிடித்த மெஸ்ஸி, "வணக்கம். எல்லாமே நன்றாக இருக்கிறது. இன்றும், எப்போதும் நீங்கள் காட்டும் அன்பிற்கு நன்றி. கடந்த உலகக்கோப்பையின் போது இந்திய ரசிகர்கள் காட்டிய ஆதரவை நான் பார்த்தேன். உங்களுடன் இந்த நாட்களைச் செலவிடுவது எனக்குக் கிடைத்த கௌரவம். மிக்க நன்றி" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். வெற்றிகரமான அணியான RR9-க்கு 'GOAT Cup' கோப்பையை மெஸ்ஸி வழங்கினார்.
கொல்கத்தாவில் ஏற்பட்ட கரும்புள்ளியை ஹைதராபாத் நிகழ்ச்சி துடைத்தெறிந்துள்ளது. முதல் நாள் பயணத்தை முடித்துக்கொண்டு மெஸ்ஸி மற்றும் குழுவினர் தற்போது மும்பை புறப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அன்று மும்பையில் மெஸ்ஸி, இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரியைச் சந்திக்கவுள்ளார். மேலும் விராட் கோலியுடனான சந்திப்பு குறித்தும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.