பல்டி அடித்து கோலடித்ததைக் கொண்டாடிய கால்பந்து வீரர்.. பலத்த அடிபட்டு உயிரிழந்தார்!
அய்ஸ்வால், மிஸோரம்: மிஸோரமைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர் பீட்டர் பியகசங்ஸுவாலா என்பவர் கோல் அடித்ததைக் கொண்டாடுவதற்காக பல்டி அடித்தார். அப்போது தரையில் விழுந்து பலத்த அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது முதுகெலும்பு கீழே விழுந்ததில் முறிந்து போனதாலும், தலையில் பலத்த அடிபட்டதாலும் அவர் உயிரிழந்துள்ளார்.
23 வயதான அய்ஸ்வாலைச் சேர்ந்த பீட்டர், மிஸோரம் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் பெத்லேகம் வெங்தலாங் என்ற அணிக்காக ஆடினார். அப்போது முக்கியமான கோல் ஒன்றை அவர் அடித்தார். இதனால் உற்சாகமடைந்த அவர் மைதானத்தில் தலை குப்புற பல்டி அடித்தார். அடுத்தடுத்து பல்டி அடித்தபோது தவறி கீழே பின்பக்கமாக விழுந்து விட்டார். இதில் தலையிலும், முதுகிலும் பலமான அடி விழுந்து விட்டது.
உடனடியாக மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் முதுகெலும்பு முழுமையாக முறிந்து போய் விட்டதாலும், தலையில் பலமாக அடிபட்டு விட்டதாலும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.
இந்தப் போட்டியில் பெத்லேகம் அணியும் தோல்வியடைந்து போனது.


Click it and Unblock the Notifications