அரையிறுதிப் போட்டிகள் துவக்கம்
ஐஎஸ்எல் 2020-21 தொடரின் லீக் சுற்று போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அரையிறுதிப்போட்டிகள் வரும் 5ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளன. அரையிறுதியில் ஏடிகே மோஹுன் பகன், மும்பை சிட்டி எப்சி, நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி மற்றும் எப்சி கோவா ஆகிய அணிகள் மோதவுள்ளதாக கால்பந்தாட்ட வளர்ச்சி குழுமம் அறிவித்துள்ளது.
இரண்டு கட்டங்களில் போட்டிகள்
முதல் போட்டியில் மும்பை சிட்டி எப்சி மற்றும் எப்சி கோவா அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி படோர்டா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த அணிகள் இரண்டு கட்டங்களில் மோதவுள்ளன. இதேபோல நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி மற்றும் ஏடிகே மோஹுன் பகன் அணிகளும் இரண்டு கட்டங்களில் அரையிறுதியில் மோதவுள்ளன.
படோர்டா மைதானத்தில் இறுதிப்போட்டி
ஐஎஸ்எல் தொடரின் அரையிறுதி போட்டிகள் வரும் 5, 6, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்த இரு அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் வரும் 13ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மோதும். இறுதிப்போட்டியும் படோர்டா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
13ம் தேதி இறுதிப்போட்டியுடன் நிறைவு
கடந்த 110வது போட்டியில் ஏடிகே மோஹுன் பகனுடன் மோதிய மும்பை சிட்டி எப்சி அணி 2க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தில் லீக் சுற்றை நிறைவு செய்து வின்னர்ஸ் கோப்பையை வென்றுள்ளது. இதையடுத்து தற்போது ப்ளே-ஆப் சுற்றில் நான்கு அணிகள் தகுதி பெற்று விளையாடவுள்ளன. கடந்த சில மாதங்களாக ரசிகர்களை குஷிப்படுத்திவந்த ஐஎஸ்எல் தொடர் வரும் 13ம் தேதி இறுதிப்போட்டியுடன் நிறைவு பெறுகிறது.