பெர்லின்: 'நெல்லி' யானை கணித்தபடியே அனைத்து போட்டிகளிலும் ஜெர்மனி அணி வெற்றி பெற்றுள்ளது. இதில் உலக கோப்பை இறுதிபோட்டியும் அடங்கும். எனவே யானைக்கு ஜெர்மனியின் தடபுடல் விருந்து நடந்து வருகிறது.
கடந்த உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின்போது 'பால்' என்று பெயரிடப்பட்ட ஆக்டோபஸ், அணிகளின் வெற்றியை கணித்தது. தண்ணீர் தொட்டிக்குள், விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகளை வைத்து ஆக்டோபஸ் அதில் எந்த கொடியை தொடுகிறதோ அந்த கொடியையுடைய நாடுதான் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது.

இந்த உலக கோப்பைக்கு யானை
ஆக்டோபஸ் தொட்ட கொடிக்குறிய நாடுதான் அன்றைய போட்டிகளில் வெற்றி பெற்று வந்தது. இந்நிலையில் போட்டித்தொடர் முடிந்த சில நாட்களிலேயே ஆக்டோபஸ் உயிரிழந்தது. இந்த உலக கோப்பை போட்டித்தொடரின் முடிவை கணிக்க ஆக்டோபஸ் இல்லையே என்ற, விளையாட்டு ஆர்வலர்களின் மனக் குறையை நீக்க ஒரு உயிரினம் ரெடியாகியது.
பெண் யானை நெல்லி
ஜெர்மனியில் உள்ள 'நெல்லி' என்ற பெயர் கொண்ட பெண் யானைதான் இந்த உலக கோப்பையின் 'ஜோதிட திலகம்'. ஆக்டோபசும், இதே ஜெர்மனி நாட்டில் உருவானதுதான் என்பதால், நெல்லி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
முதல் வகுப்பில் தேர்ச்சி
இந்த நெல்லி யானை பல வருடங்களாகவே இதற்காக பயிற்சி பெற்றுவருகிறது. 2006ம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலக கோப்பை, 2010ம் ஆண்டில் நடைபெற்ற ஆண்கள் உலக கோப்பை, 2012ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர்களில் பெரும்பாலான போட்டிகளை சரியாக கணித்துள்ளது. மொத்தம் 33 போட்டிகளில் 30 ஆட்டங்களில் நெல்லியின் கணிப்பு அப்படியே பலித்துள்ளது. எனவே கணிப்பு பரிட்சையில் நெல்லி, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டதாகவே கூறப்படுகிறது.
கணிப்பது இப்படித்தான்..
யானையின் இரு பக்கங்களிலும், 2 கோல் கம்பங்களை நட்டுவைக்கிறார்கள். கோல் கம்பங்களின் மீது இரு நாடுகளின் தேசிய கொடியை ஓட்டுகிறார்கள். இதன்பிறகு நெல்லி யானையின் காலுக்கடியில், கால்பந்து ஒன்றை வைக்கிறார்கள். அந்த பந்தை யானை எந்த நாட்டு கொடி ஒட்டப்பட்ட கோல்கம்பத்துக்குள் அடிக்கிறதோ, அந்த நாடு அன்றைய போட்டியில், தோல்வியடையும் என்று கணிக்கிறார்கள். இரு கோல்கம்பத்துக்கும் நடுவே காலியிடத்தில் பந்து சென்றால், பந்தையம் டிரா ஆவது உறுதியாம்.
அனைத்து போட்டிகளிலும் சொல்லியடித்தது
அதன்படி ஜெர்மனி இந்த உலக கோப்பையில் மோதிய அனைத்து போட்டிகளின்போதும், நெல்லியிடம் ஆரூடம் கேட்டுள்ளனர் அதன் வளர்ப்பாளர்கள். லீக் போட்டிகள் அனைத்திலும் யானை கூறியபடி ஜெர்மனி வெற்றி பெற்றது. காலிறுதியில் பிரான்சுக்கு எதிரான போட்டியின்போதும் நெல்லி கணித்தபடியே பிரான்ஸ் தோற்றது, ஜெர்மனி வென்றது.
இறுதி போட்டியிலும் கலக்கல்
அரையிறுதியில் பிரேசிலுடன் மோதிய போட்டியிலும் நெல்லி சரியாக கணித்து கூறி, ஜெர்மனியை இறுதி போட்டிக்கு வழியனுப்பி வைத்தது. இந்நிலையில் உலக கோப்பை இறுதி போட்டி நடைபெறுவதற்கு இரு நாட்கள் முன்பாக நெல்லிக்கு இறுதி சோதனை வைக்கப்பட்டது. அப்போது அர்ஜென்டினா நாட்டு தேசிய கொடி ஒட்டப்பட்ட கோல் கம்பத்திற்குள் இரு முறை நெல்லி பந்தை தட்டிவிட்டுள்ளது. அப்போதே ஜெர்மனி ரசிகர்கள் உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டனர்.
சென்டம் எடுத்த நெல்லி
நூற்றுக்கு நூறு மதிப்பெண்களுடன் நெல்லி தேர்ச்சி பெற்றுவிட்டது. கடந்தாண்டு உலக கோப்பை அரையிறுதியில் ஜெர்மனி தோற்கும் என்று ஆக்டோபஸ் கணித்தது. அதன்படியே ஜெர்மனி தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.