டெல்லி: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை புள்ளி விவரங்களுடன் நிபுணர்கள் கணித்ததைவிட தெளிவாகவும், துல்லியமாகவும் சில விலங்குகள் கணித்தன. அவ்வாறு ஜப்பானின் ஆட்ட முடிவுகளை கணித்த ரேபியாட் என்ற ஆக்டோபஸ் கசாப்பு கடைக்கு விற்கப்பட்டது.
ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. இந்த முறை உலகக் கோப்பை போட்டிகளில் எந்த அணிகள் வெற்றி பெறும் என்பது குறித்து வழக்கம்போல், பல விலங்கு ஜோதிடம் நடந்தன.
எறும்பு முதல் எலி வரை, பூனை முதல் பன்றி, ஆக்டோபஸ் என பல விலங்கு ஜோதிடம் நடந்தன. ஜப்பானைச் சேர்ந்த ஒரு மீன் வியாபாரி இவ்வாறு ஒரு ஆக்டோபஸ் மூலம் ஜப்பானின் ஆட்டங்களின் முடிவுகள் குறித்து கணித்து வந்தார்.
லீக் சுற்றில் ஜப்பான் பங்கேற்ற மூன்று ஆட்டங்களின் முடிவையும் ரேபியாட் என்ற அந்த ஆக்டோபஸ் சரியாக கணித்தது. இந்த ஆக்டோபஸ் ஜோதிடம் ஜப்பானில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் நாக் அவுட் சுற்றில் பெல்ஜியத்தை ஜப்பான் சந்தித்தது. ஆனால், இந்த ஆட்டத்தின் முடிவு குறித்து ஆக்டோபஸ் கணிப்பு குறித்து எந்த தகவலும் வராததால், ஜப்பானியர்கள் பரிதவித்து போயினர்.
காரணத்தை விசாரித்தபோது, அந்த ஆக்டோபஸ், கசாப்பு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டது தெரியவந்தது. ஏன் கசாப்பு கடைக்கு வந்தது என்று அந்த வியாபாரியிடம் கேட்டபோது, சார் எனக்கு வியாபாரம் தான் முக்கியம். இதற்கு மேல் அதை உயிரோடு வைத்திருந்தால் சல்லி காசு தேறாது என்று கூலாக கூறியுள்ளார்.
நாக் அவுட் சுற்றில் ஜப்பான் தோல்வியடைந்த சோகத்தைவிட, ரேபியாட் உயிரிழந்த சோகம்தான் அந்தப் பகுதி மக்களிடையே அதிகம் உள்ளது.