மோதலில் ஈடுபட்ட பயிற்சியாளர்கள்
ஐஎஸ்எல் 2020-21 தொடரில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற எப்சி கோவா மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கிடையிலான போட்டியில் இரு அணிகளின் கோச்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. கடுமையான வார்த்தைகளை இருவரும் பரிமாறிக் கொண்ட நிலையில், அவர்களை கோவா கேப்டன் விலக்கி விட்டார்.
பரபரப்பான சம்பவம்
இதையடுத்து டச்லைனில் பந்தை எடுக்க சென்ற கோவா அணியின் வீரர் ஆல்பர்ட்டோ நோகெரா, நார்த்ஈஸ்ட் அணியின் கோச் ஜெரார்ட் நஸ்ஸை தள்ளி விட்டார். இதையடுத்து கீழே உருண்டு விழுந்த அவரை பார்த்து கோவா அணியின் கோச் ஜூவான் பெராண்டோ சிரித்த சம்பவமும் நடைபெற்றது.
முன்பகையே காரணம்
இந்நிலையில் தற்போது இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெராண்டோ உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சம்பவத்திற்கு முன்பகையே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எந்த விஷயம் குறித்தும் தீர்மானம் செய்வதற்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோச்சாக அனுபவம்
மேலும் தான் எப்சி கோவாவின் பயிற்சியாளராக இருப்பதற்கு மிகவும் பெருமை படுவதாகவும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார். தான் இந்தியா வருவதற்கு முன்பு 7,000 கிலோ மீட்டர் தாண்டி தான் பயிற்சி செய்ய செல்வது குறித்து சிலர் விமர்சனம் செய்ததாகவும் ஆனால் தான் சரியான முடிவையே எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் சிறப்பான அணிக்கு கோச்சாக செயல்பட்டு தான் அனுபவத்தை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.