அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி
ஐஎஸ்எல் 2020-21 தொடரில் இறுதியாக இணைந்தது எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி, அந்த அணியை உருவாக்க இரண்டரை வார கால அவகாசமே அந்த அணியின் பயிற்சியாளர்களுக்கு கிடைத்தது. இந்நிலையில் முதலில் விளையாடிய மோஹுன் பகன் மற்றும் மும்பை சிட்டி அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அந்த அணி தோல்வியடைந்துள்ளது.
கவலை கொள்ளவில்லை
இந்நிலையில் தங்களை வெற்றி கொண்ட இரு அணிகளும் சிறப்பான அணிகள் என்றும் அதனால் அவர்களிடம் தோற்றது குறித்து அதிகமாக கவலை கொள்ளவில்லை என்றும் அந்த அணியின் துணை பயிற்சியாளர் டோனி கிராண்ட் தெரிவித்துள்ளார். அணியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வலிமையாக எதிர்கொள்வார்கள்
தங்களது எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணியின் வீரர்கள் குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள் தங்களை வலிமையாக்கிக் கொண்டு அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். தற்போது தான் போட்டிகள் துவங்கியுள்ளதாகவும் இன்னும் 18 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வெற்றிக்கணக்கை துவக்க முனைப்பு
தன்னுடைய முதல் இரண்டு போட்டிகளின் தோல்வியை அடுத்து எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் 2020-21 புள்ளிகள் பட்டியலில் இறுதியில் உள்ளது. இந்நிலையில் வரும் சனிக்கிழமை நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணியுடன் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி மோதவுள்ளது. அந்தப் போட்டியில் அந்த அணி வெற்றிக்கணக்கை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.