வேதனை.. ரசிகர்களை கெஞ்சி ஸ்டேடியம் வரச் சொன்ன இந்திய கேப்டன்.. இதைவிட கொடுமை உண்டா?
மும்பை: இந்திய கால்பந்து அணியை, நம் நாட்டில் எந்த நிலையில் வைத்திருக்கிறோம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸியினை முந்தியுள்ளார்.
ஃபிபா உலகக் கோப்பை 2022 மற்றும் 2023 AFC ஆசிய கோப்பை தொடர்களுக்கான தகுதிச் சுற்று போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து இந்திய அணி ஆடியது. இதில், இரண்டு கோல் அடுத்த சுனில் சேத்ரி, 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அணி ஃபிபா உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெற காரணமாக இருந்தார். இந்த இரண்டு கோல்களின் மூலம் உலக அளவில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ஒட்டுமொத்தமாக 74 கோல்களுடன் 2ம் இடத்திற்கு சுனில் முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் மெஸ்ஸி அடித்துள்ள மொத்த கோல்கள் 72.
இதில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திரம் வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ 103 கோல் அடித்து முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்த அளவில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஈரானைச் சேர்ந்த அலி தேய் 109 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

கால்பந்து எந்த நிலையில்?
உலகமே கொண்டாடும் நட்சத்திர வீரரான மெஸ்ஸியை விட, நமது இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, அதிக கோல்கள் அடித்திருக்கும் வீரர்கள் பட்டியலில் முந்தியிருப்பது உண்மையில் நாம் பெருமை கொள்ள வேண்டிய தருணம் தான். எந்த எதிராணியுடன் ஆடினார்கள் என்ற வாதம் ஒருபக்கம் இருந்தாலும், ஏதோ ஒரு சர்வதேச அணிக்கு எதிராகவே சுனில் சேத்ரி இத்தனை கோல்களும் அடித்திருக்கிறார். அதேசமயம், நாம் இந்த கால்பந்து விளையாட்டை நமது நாட்டில் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

குறைவான ரசிகர்கள்
கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவில் நான்கு நாடுகள் மோதிய கால்பந்து தொடர் நடைபெற்றது. இதில், சீன தைபே அணியுடன் மோதிய இந்தியா 5-0 என்ற கணக்கில் அபார வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார். இது அவரது மூன்றாவது சர்வதேச ஹாட்ரிக் கோலாகும். ஆனால், அவரது இந்த சாதனையை மைதானத்தில் இருந்து நேரில் பார்த்தது வெறும் 2 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் தான். இதனால், மிகுந்த வருத்தமடைந்த சுனில் சேத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

கிண்டல் பண்ணுங்க
அதில், "நீங்கள் எதிர்பார்க்கும் தரமில்லாததை பார்த்து உங்களது நேரத்தை வீணாக்க விரும்ப மாட்டீர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இங்கு ஐரோப்பிய தரம் இல்லை. ஆனால், நாங்கள் உங்களது நேரத்தை பயனளிக்கும் விதமாக எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம். இந்திய கால்பந்தின் மீது கடைசி நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அல்லது நம்பிக்கையே இல்லாதவர்கள் மைதானத்தில் வந்து எங்களை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன். மைதானத்துக்கு வந்து எங்களை கிண்டல் செய்யுங்கள், விமர்சியுங்கள், உற்சாகப்படுத்துங்கள். ஆனால், இந்திய கால்பந்து அணிக்கு நீங்கள் தேவை" என்று உருக்கமாக கோரிக்கை விடுத்திருந்தார்.

அரங்கை நிரப்பிய ரசிகர்கள்
இதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சுனில் சேத்ரியின் இந்த வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்து, மக்களும் அனைத்து விதமான விளையாட்டுக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனால், சுனில் சேத்ரியின் வீடியோ மிகவும் வைரலானது. இதைப் பார்த்த சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில், "கமான் இந்தியா... இனி எங்கு இந்திய அணி கால்பந்து ஆடினாலும் மைதானத்தை முழுவதும் நிரப்புவோம்" என்று கூற, ஒட்டுமொத்த தேசமும் தனது ஆதரவை சமூக தளங்களில் மூலம் சுனில் சேத்ரிக்கு அளித்தது மட்டுமின்றி, இந்திய விளையாடிய அடுத்த போட்டிக்கு சென்று அரங்கையும் நிரப்பினார்கள்.


Click it and Unblock the Notifications